Paristamil Navigation Paristamil advert login

கேரளா, கர்நாடகாவிலும் ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை மையம்!

கேரளா, கர்நாடகாவிலும் ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை மையம்!

25 வைகாசி 2025 ஞாயிறு 09:51 | பார்வைகள் : 4329


கர்நாடகாவில் 3 நாட்களுக்கும், கேரளாவிற்கு 2 நாட்களுக்கும் அதி கன மழை முன்னெச்சரிக்கை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

ஒரு வாரத்துக்கு முன்பாகவே தென்மேற்கு பருவமழை நேற்று துவங்கி விட்டதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 16 ஆண்டுகளுக்கு பின், கேரளாவில் பருவமழை முன்கூட்டியே துவங்கி உள்ளதால், அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவில், கோழிக்கோடு, இடுக்கி, பத்தனம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழைபெய்தது. இதனால், சாலையோரங்களில் இருந்த மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தன;

மின்கம்பங்களும் சாய்ந்தன. இரவு முழுதும் கொட்டி தீர்த்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல சூழ்ந்தது. கர்நாடகாவில் 3 நாட்களுக்கும், கேரளாவிற்கு 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. மஹாராஷ்டிராவில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.