திருகோணமலையில் பிரசவத்தின் போது சிசு மரணம் - பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்
11 வைகாசி 2026 திங்கள் 13:30 | பார்வைகள் : 1954
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் விசேட வைத்தியர் ஒருவர் மற்றும் அதே வைத்தியசாலையின் சிரேஷ்ட விடுதி பெண் வைத்தியர் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தீர்மானித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி குறித்த வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரசவத்தின் போது சிசு மரணமடைந்த சம்பவம் தொடர்பில் அந்த அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கல் நிலை காரணமாக, அந்த இரண்டு வைத்தியர்களையும் பிரசவ அறைக்கு வருமாறு கோரி வைத்தியசாலையின் விடுதி பெண் வைத்தியர் 6 முறை தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்திய போதிலும், அவர்கள் அந்த நேரத்தில் அங்கு வரவில்லை என அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அதேவேளை, குறித்த இரண்டு வைத்தியர்களும் அந்த நேரத்தில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிசேரியன் (கருப்பை அறுவை சிகிச்சை) ஒன்றில் ஈடுபட்டிருந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் சுகாதார அமைச்சு ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.
அதன்படி கண்டறியப்பட்ட உண்மைகளின் அடிப்படையில், கடமை நேரத்தில் சேவையைப் புறக்கணித்து முறையற்ற விதத்தில் தனியார் வைத்தியசாலையில் சேவையில் ஈடுபட்டமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுகள் தொடர்பாக அந்த இரண்டு வைத்தியர்களின் சேவையும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் முறையான ஒழுக்காற்று விசாரணையை சுகாதார அமைச்சு முன்னெடுக்கவுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire