குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் அஜித் தாயார் இறுதிச்சடங்கு!
30 வைகாசி 2026 சனி 16:39 | பார்வைகள் : 1139
நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி, உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் விஜய், திமுக., தலைவர் ஸ்டாலின், அதிமுக., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது...
எங்கள் அன்புத் தாயார் மோகினி மணி, 89, கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை தனது உறக்கத்திலேயே இயற்கை எய்தினார். இந்த துயரமான தருணத்திலும், அவர் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்ததையும், அன்பும் அக்கறையும் நிறைந்த உறவுகளால் சூழப்பட்டிருந்ததையும், அவரை அறிந்த அனைவரின் உண்மையான மரியாதையையும் பெற்றிருந்ததையும் நினைத்து ஆறுதல் அடைகிறோம்.
எங்களின் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் அடைந்துள்ள வெற்றிகளுக்கும் சாதனைகளுக்கும் முக்கிய காரணம் அவர் தான். எங்கள் மறைந்த தந்தையாருடன் கிட்டத்தட்ட ஆறு தசாப்தங்கள் நீண்ட இனிய தம்பதிய வாழ்க்கையை அவர் அனுபவித்தார். அவர்கள் இணைந்து பகிர்ந்துகொண்ட அன்பான நினைவுகள் எங்களுக்கு என்றும் ஆறுதலையும் வலிமையையும் அளித்துக் கொண்டே இருக்கும்.
எங்களுக்கு அனுப்பப்பட்டு வரும் அன்பான இரங்கல் செய்திகள், ஆறுதல் வார்த்தைகளால் நெகிழ்ந்து போயுள்ளோம். இந்த நேரத்தில் தொலைபேசி அழைப்புகளை ஏற்கவோ அல்லது செய்திகளுக்கு உடனடியாக பதிலளிக்கவோ இயலாமல் இருக்கலாம் என்பதை புரிந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
அவரது இறுதிச்சடங்குகள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் தனிப்பட்ட நிகழ்வாக நடைபெறும். பெற்றோர் அல்லது அன்பிற்குரிய மூத்தவரை இழந்த வலியை உணர்ந்த அனைவரும், எங்கள் அமைதியான துக்கத்தை மதித்து, அவர் வாழ்நாள் முழுவதும் எங்களுக்குக் கற்றுத்தந்த சமநிலை, கண்ணியம் மற்றும் மென்மையான மனவலிமையுடன் அவரது நினைவைப் போற்றுவார்கள் என்று நம்புகிறோம்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan