லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் தீவிரம் - ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கடும் கண்டனம்!!
1 ஆனி 2026 திங்கள் 08:31 | பார்வைகள் : 2142
இஸ்ரேலின் புதிய இராணுவ நடவடிக்கையை கண்டித்துள்ள ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், “தெற்கு லெபனானில் நடைபெற்று வரும் இந்த தீவிர இராணுவ விரிவாக்கத்திற்கு எந்த நியாயமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
லெபனானில் அனைத்து தரப்பினரும் ஆயுத மோதல்களை நிரந்தரமாக நிறுத்த வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தியதுடன், நாட்டின் இறையாண்மையையும் நிலப்பரப்பு ஒருமைப்பாட்டையும் மீட்டெடுக்க லெபனான் அரசாங்கத்திற்கு பிரான்ஸ் தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
லெபனானில் இஸ்ரேல் தனது தரைப்படை நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தியுள்ள நிலையில், அந்நாட்டு சுகாதார அமைச்சர் சர்வதேச சமூகம் தலையிட்டு தாக்குதல்களின் தீவிரத்தையும் பரவலையும் உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, தெற்கு லெபனானில் நிலவும் பதற்றம் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக பிரான்ஸ் கவலை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், டயர் நகரில் உள்ள ஹிராம் வைத்தியசாலைக்கு அருகே நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 13 மருத்துவப் பணியாளர்கள் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேநேரத்தில், இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்து அவசர ஆலோசனை நடத்துவதற்காக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டம் ஜுன் மாதம் 1ம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan