Paristamil Navigation Paristamil advert login

குதிரை பேரத்தில் ஈடுபட்ட முதல்வர் மீது நடவடிக்கை: கவர்னருக்கு திமுக கடிதம்

குதிரை பேரத்தில் ஈடுபட்ட முதல்வர் மீது நடவடிக்கை: கவர்னருக்கு திமுக கடிதம்

2 ஆடி 2026 வியாழன் 14:30 | பார்வைகள் : 596


குதிரை பேரத்தில் முதல்வர் விஜய் ஈடுபட்டதை, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ ஒப்புக்கொண்டதால், நடவடிக்கை எடுக்க, ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும்' என, கவர்னர் அர்லேக்கருக்கு, தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதியுள்ளார்.

சென்னையில் நடந்த ம.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டத்தில், தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகி, த.வெ.க., அரசுக்கு ஆதரவாக செயல்படப் போவதாக தீர்மானிக்கப்பட்டது.

பின், வைகோ அளித்த பேட்டியில் , 'உதயசூரியன் சின்னத்தில் வென்ற ம.தி.மு.க., -எம்.எல்.ஏ.,க்கள் இருவரும் ராஜினாமா செய்து இடைத்தேர்தலை சந்தித்தால், அவர்களுக்காக, நேரடியாக பிரசாரம் செய்வதாக, முதல்வர் விஜய் என்னிடம் கூறினார்' என தெரிவித்தார்.

இதன் அடிப்படையில், முதல்வர் விஜய் மீது நடவடிக்கை எடுக்குமாறு, கவர்னரிடம் தி.மு.க., கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, தி.மு.க., தலைமை அறிக்கை:

சட்டசபை தேர்தலில், கடையநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரன், சீர்காழி எம்.எல்.ஏ., செந்தில்செல்வன் இருவரும் தி.மு.க., வேட்பாளர்களாக, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றனர். தற்போது, ஆளும் கட்சியான த.வெ.க.,வுக்கு பெரும்பான்மை இல்லை.

சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில், அந்த இரண்டு எம்.எல்.ஏ.,க்களையும் பதவி விலக செய்ய, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவுடன் இணைந்து, முதல்வர் விஜய் கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளார். இந்த விவகாரத்தை வைகோவே வெளிப்படையாக அம்பலப்படுத்தியுள்ளார்.

சட்டவிரோத குதிரை பேரத்தில், முதல்வர் விஜய் நேரடியாக ஈடுபட்டுள்ளதால், அவர் மீது வழக்குப்பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என, கவர்னருக்கு தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி கடிதம் அனுப்பியுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.