Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் அடுத்த 6 மாதங்களுக்கு நீர் கட்டணத்தில் மாற்றமில்லை!

இலங்கையில் அடுத்த 6 மாதங்களுக்கு நீர் கட்டணத்தில் மாற்றமில்லை!

2 ஆடி 2026 வியாழன் 12:31 | பார்வைகள் : 860


இந்த ஆண்டின் அடுத்த 6 மாதங்களுக்கு நீர் கட்டணத்தில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் நீர் சுத்திகரிப்பு பணிகளுக்காக சபைக்கு பெரும் செலவு ஏற்படவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை என அமைச்சர் சுசில் ரணசிங்க கூறினார்.

ஆண்டுதோறும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நீர் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படுவதுடன், இந்த ஆண்டின் முதல் 06 மாதங்களுக்கும் நீர் கட்டண திருத்தம் எதனையும் மேற்கொள்ளாதிருக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

ஜூலை முதலாம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையான 06 மாத காலப்பகுதியில் கட்டண அதிகரிப்பு ஏதேனும் ஏற்படுமா என்பது குறித்து 'அத தெரண', வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்கவிடம் வினவியது,

அதற்கு பதில் வழங்கிய அமைச்சர், இந்த 6 மாத காலத்தில் 18% மின்சாரக் கட்டண அதிகரிப்பு மாத்திரமே ஏற்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு உண்மையில் நீர் சுத்திகரிப்பு பணிகளைப் பாதிப்பதில்லை.

மின்சாரக் கட்டண அதிகரிப்பே பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனினும், நீர் கட்டணத்தில் மின்சாரக் கட்டணத்தின் பங்கு 12% மாத்திரமேயாகும்.

எனவே, அந்த 12% அளவே 18% இனால் அதிகரித்துள்ளது. அது ஒரு அலகு நீருக்கு சுமார் 2.50 ரூபாய் போன்றதொரு தொகையாகும்.

இதனால், இந்த 6 மாத கால செலவீனம் மிகக் குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பெரும்பாலும் அடுத்த 6 மாதங்களுக்கும் நீர் கட்டணத்தில் திருத்தம் செய்யப்படாமல் இருக்கவே வாய்ப்புள்ளது என்றார்.