Paristamil Navigation Paristamil advert login

ஆறு தொகுதி இடைத்தேர்தல் நடத்தக்கூடாது; தேர்தல் கமிஷனில் அதிமுக மனு

ஆறு தொகுதி இடைத்தேர்தல் நடத்தக்கூடாது; தேர்தல் கமிஷனில் அதிமுக மனு

3 ஆடி 2026 வெள்ளி 09:23 | பார்வைகள் : 468


குதிரை பேரம் நடந்துள்ளதால், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்த தொகுதிகளுக்கு, இடைத்தேர்தல் நடத்தக்கூடாது. இது குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும்' என, தலைமை தேர்தல் கமிஷனில், அ.தி.மு.க., சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு பின், அ.தி.மு.க., -எம்.எல்.ஏ.,க்கள் மரகதம், ஜெயகுமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகிய ஆறு பேரும் பதவியை ராஜினாமா செய்து விட்டு, ஆளும் கட்சியான த.வெ.க.,வில் இணைந்து விட்டனர்.

இந்நிலையில், 'அ.தி.மு.க., -எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்த ஆறு சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது' என டில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில், அ.தி.மு.க., சார்பில், இன்பதுரை எம்.பி., மனு அளித்தார்.

பின், அவர் அளித்த பேட்டி:

அரசியலமைப்பு சட்டப்படி, ஆறு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும் என்ற சூழல் உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் இன்னொரு இடத்தில், கட்சி தாவல் செய்யக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடந்தால், கட்சி தாவிய 6 பேரும் அங்கு போட்டியிடுவர். அப்படியானால், சட்டம் என்ற ஒன்று எதற்கு இருக்கிறது.

ஒருவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலோ, இறந்தாலோ மட்டுமே, இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இங்கு அப்படி இல்லை. இந்த தொகுதிகள், மர்மான முறையில் காலியாகியுள்ளன. முதலில் பதவி விலகிய நான்கு பேர் தொடர்பான வழக்குகள், சென்னை ஐகோர்ட்டில் உள்ளன. வழக்குகள் நிலுவையில் இருந்தால், அங்கு தேர்தல் நடத்தக்கூடாது என்பது எங்கள் கோரிக்கை.

சி.விஜயபாஸ்கர், தன்னைத்தானே கொறாடாவாக அறிவித்து, ஒரு கடிதம் தந்தார். அப்போதே, தகுதி நீக்கத்துக்கு அவர் தகுதியாகி விட்டார். மன்னிப்பு கடிதம் தந்ததால், சபாநாயகருக்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கொடுத்த கடிதத்தால், இரண்டு விஜயபாஸ்கர்களும் தப்பித்தனர்.

தற்போது, அரசியலமைப்பு சட்டம் உள்பட அனைவர் கண்ணிலும் மண்ணை தூவிவிட்டு, இன்னொரு கட்சியில் சேர்ந்துள்ளனர். எனவே, இவர்கள் மீது கட்சி தாவல் தடைச்சட்டம் பாய வேண்டும். குதிரை பேர குற்றச்சாட்டு குறித்து தேர்தல் ஆணையம் விசாரிப்பதோடு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்த தொகுதிகளுக்கு, இடைத்தேர்தல் நடத்தக்கூடாது.

த.வெ.க., பெரும்பான்மை பெற, முதல்வர் விஜயே நேரடியாக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார். எனவே, தமிழக கவர்னர் மற்றும் கோர்ட்டுகள் இவற்றை வேடிக்கை பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.