Paristamil Navigation Paristamil advert login

2009ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தோருக்கு சிகரெட் விற்க தடை: L'Assurance-maladie பரிந்துரை!!

2009ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தோருக்கு சிகரெட் விற்க தடை: L'Assurance-maladie பரிந்துரை!!

2 ஆடி 2026 வியாழன் 21:15 | பார்வைகள் : 2385


2009ஆம் ஆண்டிற்குப் பிறகு பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்று தேசிய சுகாதார காப்புறுதி நிறுவனம் (L'Assurance-maladie ) பரிந்துரைத்துள்ளது. 2026 ஜூலை மாதம் 2ம் திகதி வெளியிடப்பட்ட அதன் ஆண்டு அறிக்கையில், “புகையிலை இல்லாத தலைமுறை” உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்ற சட்டத்தை சமீபத்தில் ஐக்கிய இராச்சியம் நிறைவேற்றியுள்ளதாகவும், அதனை செயல்படுத்திய உலகின் இரண்டாவது நாடாக அது மாறியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

L'Assurance-maladie நிறுவனத்தின் பொதுநிர்வாக இயக்குநர் Thomas Fatôme ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில், “ஐக்கிய இராச்சியம் செய்ததைப் போல பிரான்சும் செய்ய முடியும். சிகரெட் பொதிகளில் எச்சரிக்கை அறிவிப்புகள், விலை உயர்வு போன்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும், அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் பிரான்ஸ் இன்னும் பின்னிலையில் உள்ளது” என தெரிவித்துள்ளார். மேலும், தடுப்பு சுகாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் தற்போது அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

L'Assurance-maladie நிறுவனத்தின் தலைவர் Samira Lehaine, “தடுப்பு நடவடிக்கைகளே இந்த தசாப்தத்தின் முக்கியப் போராட்டமாகும்” என தெரிவித்துள்ளார். இதனுடன், உணவுப் பொருட்களில் கட்டாயமாக “உணவுச் சத்து தரம்” குறியீட்டை அறிமுகப்படுத்தவும், அதனுடன் பொருட்கள் அதிகமாக செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டவையா என்பதையும் குறிப்பிட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

மேலும், சாலை விபத்துகள் அதிகரித்து வருவதால், 12 வயதுக்கு மேற்பட்டோர் மிதிவண்டி மற்றும் மின்சார பயண சாதனங்களைப் பயன்படுத்தும் போது கட்டாயமாக பாதுகாப்புத் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.