Paristamil Navigation Paristamil advert login

உச்ச தலைவர் காமேனியின் இறுதிச் சடங்கு - பல நாடுகளின் சர்வதேச பிரதிநிதிகள் பங்கேற்பு !

உச்ச தலைவர் காமேனியின் இறுதிச் சடங்கு - பல நாடுகளின் சர்வதேச பிரதிநிதிகள் பங்கேற்பு !

4 ஆடி 2026 சனி 12:15 | பார்வைகள் : 1057


ஈரானின் உச்ச தலைவர் என அறியப்படும் அலிகாமேனியின் இறுதிச் சடங்கில் சர்வதேச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பலர் ஈரானின் தலைநகர்  தெஹ்ரானில் திரண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அவர் கொல்லப்பட்டதாக கூறப்படும் சில தகவல்கள் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படாத நிலையில், இவை தொடர்பான சரியான நிலைமை குறித்து ஈரான் அரசு இதுவரை தெளிவான அறிவிப்பை வெளியிடவில்லை.

பாதுகாப்பு மற்றும் போர் பதற்ற சூழ்நிலைகள் காரணமாக, பல தகவல்கள் சர்வதேச ஊடகங்களில் மாறுபட்ட வகையில் வெளியாகி வருகின்றன.

இதேவேளை, தெஹ்ரானில் உள்ள பெரிய மசல்லா மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு வார கால அரசு முறை இறுதிச் சடங்கு நிகழ்வுகள் நடைபெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானின் அரச செய்தி நிறுவனம் IRIB வெளியிட்டதாக கூறப்படும் தகவலின்படி, 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, பாகிஸ்தான் பிரதமர் செபாஷ் ஷெரீப், தஜிகிஸ்தான் ஜனாதிபதி இமோலி ரெங்மோன், ஆர்மீனியா பிரதமர் நிஹோல் பிஸியன் மற்றும் ஜோர்ஜியா ஜனாதிபதி மிஹில் கவிலாஷ்வி ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும், துருக்கியின் துணை ஜனாதிபதி, ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் டிமித்ரி மெத்விடேவ், சீன தேசிய மக்கள் காங்கிரஸ் நிலை குழு துணைத் தலைவர் He Wei, ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பங்களாதேஷ் பாராளுமன்ற சபாநாயகர் உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூபு் ஹக்கீம் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனுடன், ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய பிராந்தியங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 30க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிராந்தியத்தில் நிலவும் அரசியல் மற்றும் பாதுகாப்பு பதற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியில் நடைபெறும் இந்த நிகழ்வு, உலக அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.