Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தானில் அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து பள்ளத்தில் பஸ் வீழ்ந்து விபத்து! 40 பேர் பலி!

பாகிஸ்தானில் அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து பள்ளத்தில் பஸ் வீழ்ந்து விபத்து!  40 பேர் பலி!

4 ஆடி 2026 சனி 15:40 | பார்வைகள் : 579


பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில்  வெள்ளிக்கிழமை 03.07.2026 அதிகாலை அதிகளவான பயணிகளுடன் பயணித்த பஸ் ஒன்று, அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து பாறைகள் நிறைந்த பள்ளத்தாக்கினுள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பலுசிஸ்தான் அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளான பஸ்ஸிலிருந்த பயணிகளுடன், மற்றொரு பஸ்ஸிலிருந்த பயணிகளையும் ஏற்றிச் சென்றுள்ள குறித்த பஸ்ஸில் அதிகமான பயணிகள் பயணித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழப்புகளுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, காயமடைந்தவர்களுக்கு சாத்தியமான சிறந்த மருத்துவ சிகிச்சையை வழங்குவதை உறுதி செய்யுமாறு பலுசிஸ்தான் முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களை அடையாளம் காணவும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் மீட்புக்குழுவினர் தீவிரமாக செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசமான வீதிக் கட்டமைப்பு, போக்குவரத்துச் சட்டங்கள் சரியாக நடைமுறைப்படுத்தப்படாமை மற்றும் ஆபத்தான முறையில் வாகனங்களைச் செலுத்துதல் போன்ற காரணங்களால் பாகிஸ்தானில், குறிப்பாக மலைப்பாங்கான பகுதிகளில் இவ்வாறான விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.