Paristamil Navigation Paristamil advert login

இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை; நெருக்கடி நிலையிலும் நாட்டுக்கே முன்னுரிமை: பிரதமர் மோடி

இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை; நெருக்கடி நிலையிலும் நாட்டுக்கே முன்னுரிமை: பிரதமர் மோடி

5 ஆடி 2026 ஞாயிறு 05:14 | பார்வைகள் : 583


மத்திய அரசின், 'இந்தியாவுக்கே முன்னுரிமை' கொள்கை மற்றும் துாதரக நடவடிக்கைகள் காரணமாகவே, உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியிலும், நாட்டில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை,'' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு பலோத்ரா மாவட்டத்தில் உள்ள பச்சபத்ரா என்ற இடத்துக்கு நேற்று வந்த பிரதமர் மோடி, அங்கு நடந்த நிகழ்ச்சியில், நாட்டின் முதல் பசுமை மண்டல ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் வளாகத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து, ராஜஸ்தான் அரசுப் பணிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார். விழாவில், ராஜஸ்தான் கவர்னர் ஹரிபாபு பாகடே, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, முதல்வர் பஜன்லால் சர்மா ஆகியோர் பங்கேற்றனர்.

பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

மத்திய அரசு நாட்டின் நலன்களை பாதுகாப்பதோடு, தடையற்ற எரிபொருள் வினியோகத்தை உறுதி செய்துள்ளது. 'இந்தியாவுக்கே முன்னுரிமை' என்ற கொள்கையில் நாங்கள் உறுதியாக இருந்தோம். உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் போது, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படாததற்கு எங்களது துாதரக நடவடிக்கைகளே காரணம்.

உலகம் முழுதும் டீசல் விலை, 40 சதவீதம் வரை உயர்ந்திருந்தாலும், நம் நாட்டில் பெட்ரோல், டீசல் வினியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட நாங்கள் அனுமதிக்கவில்லை. எனினும், இது பற்றி எதிர்க்கட்சிகள் வதந்தி பரப்பின. ஆனால் அவை வெற்றி பெறவில்லை.

உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ததுடன், 40-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நம் நாடு எரிபொருளை ஏற்றுமதி செய்துள்ளது. உலகளாவிய வினியோகத் தொடர் பாதிக்கப்பட்டிருந்தாலும், சமையல் எரிவாயு தடையின்றி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்தது.

சர்வதேச விலை நிலவரப்படி, சமையல் காஸ் சிலிண்டர் ஒன்றின் விலை, 2,000 ரூபாய் வரை உயர்ந்திருக்க வாய்ப்பிருந்தது. ஆனால் நாங்கள், 950- ரூபாய்க்கு வழங்கினோம். 'உஜ்வாலா' திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு இலவச சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதி செய்தோம்.இவ்வாறு அவர் பேசினார்.