Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் கைத்தொலைபேசி விற்பனையாளர்கள் உரிய உரிமத்தைப் பெறுவதற்கு ஒருமாதகால அவகாசம்

இலங்கையில் கைத்தொலைபேசி விற்பனையாளர்கள் உரிய உரிமத்தைப் பெறுவதற்கு ஒருமாதகால அவகாசம்

5 ஆடி 2026 ஞாயிறு 18:07 | பார்வைகள் : 977


தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசேட விசாரணைப் பிரிவு, தற்போது மீண்டும் செயற்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நிதி மற்றும் தொழில்நுட்ப விவகாரங்கள் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுப்பதே இந்த அலகின் முக்கிய பணியாகும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் பண்டார ஹேரத் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நிதி மற்றும் தொழில்நுட்ப விவகாரங்கள் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளும் விசாரணைப் பிரிவில் உள்வாங்கப்பட்டுள்ளனர். அவர்கள் உத்தியோகபூர்வமாக நேற்று முதல் இந்த அணியுடன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஆணைக்குழுவின் முறையான அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கைத்தொலைபேசி விற்பனை செய்யும் வர்த்தகர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதே இந்த விசாரணைப் பிரிவின் முதன்மைப் பணியாகும்.

எவ்வாறெனினும், உரிய அனுமதிப்பத்திரமின்றி கைத்தொலைபேசிகளை விற்பனை செய்பவர்கள் தமக்கான உரிமத்தைப் பெற்றுக்கொள்வதற்காக ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, அனுமதிப்பத்திரம் இல்லாத சில்லறை விற்பனை நிலையங்களில் நுகர்வோரால் கொள்வனவு செய்யப்படும் கைத்தொலைபேசிகளின் சேவை இணைப்பு அல்லது பாதுகாப்புச் சேவைகள் தொடர்பாக எழும் எவ்விதப் பிரச்சினைகளுக்கும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பொறுப்பேற்காது என்றார்.