Paristamil Navigation Paristamil advert login

சீமான் - உதயநிதி சந்திப்பு: கூட்டணிக்கு அச்சாரமா?

சீமான் - உதயநிதி சந்திப்பு: கூட்டணிக்கு அச்சாரமா?

6 ஆடி 2026 திங்கள் 05:14 | பார்வைகள் : 396


சென்னையில் நடந்த திருமண விழாவில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியும் கட்டியணைத்து, மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டதால், தி.மு.க., மற்றும் நாம் தமிழர் கட்சியிடையே கூட்டணிக்கு அச்சாரம் போடப்பட்டுள்ளதா? என கேள்வி எழுந்துள்ளது.

சட்டசபை தேர்தலுக்கு பின், தி.மு.க., கூட்டணியில் வெற்றி பெற்ற காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட்கள், ம.தி.மு.க., மற்றும் முஸ்லீம் லீக் கட்சிகள் விலகி விட்டன. இக்கட்சிகள், த.வெ.க., அரசுக்கு ஆதரவு அளித்துள்ளதுடன், த.வெ.க., தலைமையில் புதிய கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளன.

தற்போது, தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ., ஆகிய கட்சிகள் மட்டும் உள்ளன. இதற்கிடையே, சமீப நாட்களாக, நாம் தமிழர் கட்சியுடன் தி.மு.க., திடீர் நெருக்கம் காட்டி வருகிறது.

புதுச்சேரியில் நடந்த ஒரு திருமண விழாவில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் ஒன்றாக பங்கேற்றனர். அப்போது, அருகருகே அமர்ந்து உற்சாகமாக பேசிக்கொண்டனர்.

இந்நிலையில், சென்னை திருவேற்காட்டில், தி.மு.க., தலைமை நிலைய செயலர் துறைமுகம் காஜா இல்ல திருமண விழா  நடந்தது. இதில், பங்கேற்க, உதயநிதி வந்த சில நிமிடங்களில் சீமானும் வந்தார்.

உதயநிதியை பார்த்ததும், சிரித்தபடி அவர் அருகில் சீமான் சென்றார். உடனே, உதயநிதி எழுந்து வந்து, சீமானை கட்டியணைத்து, கைகளை குலுக்கி, 'வாங்க அண்ணே' என வரவேற்றார்.

இதையடுத்து, உதயநிதியின் கைகளை இறுகப்பற்றிக் கொண்டு, 'அப்பா நல்லா இருக்காருங்களா தம்பி; உடம்பை நல்லா பாத்துக்கச் சொல்லுங்க. வெளிநாடு பயணம் வெற்றிகரமாக இருக்கட்டும். சின்ன தம்பி இன்பநிதி பட்டம் வாங்குவதற்கு என் வாழ்த்துகள்' என சீமான் கூறினார்.

அதற்கு பதிலளித்த உதயநிதி, 'அப்பா நல்லா இருக்காங்க அண்ணே... நீங்களும் உடம்பை பாத்துக்கங்க... நீங்க கேட்டதாக அப்பாவிடம் சொல்லி விடுகிறேன். இன்பநிதிக்கும் உங்க வாழ்த்தை சொல்கிறேன்' என்றார்.

மேடையில் இருவரும் சிரித்து பேசிக் கொண்டிருந்த காட்சி, அங்கிருந்த இரு கட்சியினரையும் உற்சாகப்படுத்தியது. இருவரின் பாசப்பிணைப்பால், தி.மு.க., மற்றும் நாம் தமிழர் கட்சியிடையே கூட்டணிக்கு அச்சாரம் போடப்பட்டுள்ளதா? என கேள்வி எழுந்துள்ளது.

திருமண விழாவில், உதயநிதி பேசியதாவது: நாட்டில் என்ன நடக்கிறது என, எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று சிலர், 'சோபா' வந்தவுடன் நம்மை விட்டு விலகி விட்டனர். ஆனால், நீங்கள் அத்தனை பேரும், 'தி.மு.க.,வுடன் இருப்போம்' என்ற உறுதியோடு இருக்கிறீர்கள். முஸ்லிம்களுக்கும், தி.மு.க.,வுக்குமான உறவை யார் வந்தாலும் பிரிக்க முடியாது. யார் என்ன சொன்னாலும், எந்த அவதுாறுகளை பரப்பினாலும், சிறுபான்மை மக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் தி.மு.க., என்றைக்கும் காவல் அரணாக இருக்கும். இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் பேரிடரில் இருந்து, தமிழகத்தை தி.மு.க., நிச்சயம் மீட்கும். இவ்வாறு அவர் பேசினார்.