Paristamil Navigation Paristamil advert login

தவெகவை ஆதரிப்பதால் கோபம் கொண்டு என் மீது பாய்கின்றனர்; வைகோ

தவெகவை ஆதரிப்பதால் கோபம் கொண்டு என் மீது பாய்கின்றனர்; வைகோ

6 ஆடி 2026 திங்கள் 07:52 | பார்வைகள் : 328


தவெகவை ஆதரிப்பதால் கோபம் கொண்டு என் மீது பாய்கின்றனர் என்று திமுக மீது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்

அவர் அளித்த பேட்டி;

ஆட்சியை இழந்துவிட்டு உங்களால் கொஞ்சம் கூட நிம்மதியாக இருக்கமுடியாதா (திமுகவை குறிப்பிடுகிறார்) அதிமுக ஆட்சிக்கே ஆதரவு கொடுப்போம் என்று சொல்லி விட்டுள்ளனர்.

தவெகவை ஆதரிப்பதால் இன்னும் கோபம் கொண்டு என் மீது பாய்கிறார்கள். எங்களை நடத்திய விதம், இடங்கள் ஒதுக்கப்பட்ட விதம், மற்ற கட்சிகளுக்கு சமமாக எங்களை நடத்துங்கள் என்று கேட்டோம். அதற்கெல்லாம் இடமில்லை. இந்த 4 சீட்டுகளுக்கு கையெழுத்து போட்டுவிட்டு போங்கள். வேறு பேச்சுக்கு இடமில்லை என்று எங்கள் குழுவினரிடம் முகத்தில் அடித்ததுபோல் சொன்னார்கள்.

அதையும் தாங்கிக் கொண்டோம். ஒரு இடத்தில் எங்கள் சின்னத்தில் போட்டி போட கேட்டோம். ஒப்புக்கொள்ள முடியாது என்று கூறினர். 34 தொகுதிகளில் திமுகவை ஆதரித்து, திமுக சாதனை பட்டியலை வாசித்து, கூட்டணி தர்மத்திற்கு கட்டுப்பட்டு பிரசாரத்தில் ஈடுபட்டேன்.

அவர்கள் எங்களை நடத்திய விதத்தால் கூட்டணியில் இருக்கக்கூடாது என்பது கட்சியினரின் ஒட்டுமொத்த கருத்து பொதுக் குழுவிலே பிரதிபலித்தது. கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த போது பொதுக்குழு அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது.

தவெகவுடன் தோழமை கொள்வது என்று முடிவெடுத்தோம். அந்த தோழமையில் நாங்கள் தொடர்கிறோம். முந்தைய அரசின் காலத்தில் இருந்த கேடான ஊழலை தவெக அரசு நீக்கி இருக்கிறது என்பது மக்களுக்கு இனிப்பான செய்தி.

இவ்வாறு வைகோ கூறினார்.