Paristamil Navigation Paristamil advert login

கட்சி மாறும் கலாசாரத்தை ஊக்குவிக்க கூடாது; அர்ஜுன் சம்பத்

கட்சி மாறும் கலாசாரத்தை ஊக்குவிக்க கூடாது; அர்ஜுன் சம்பத்

6 ஆடி 2026 திங்கள் 11:04 | பார்வைகள் : 287


கட்சி மாறும் கலாசாரத்தை முதல்வர் விஜய் ஊக்குவிக்க கூடாது. மத்திய அரசுடன் இணைந்து தமிழகத்திற்கு நல்ல திட்டங்களை கொண்டு வர வேண்டும்,'' என, காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்த ஹிந்து மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

பிரதமர் மோடியின் நல்லாட்சி தமிழகத்திலும் வருவதற்காக காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தியதோடு, ஊதியமும் உயர்த்தப்பட்டுள்ளது. போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் ஓடினார். போதை பழக்கத்திலிருந்து இளைஞர்களை மீட்க மதுக்கடைகளை மூட வேண்டும். விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் கள் இறக்க அனுமதிக்க வேண்டும்.

தி.மு.க.,வினர், அ.தி.மு.க.,வினர் சாராய ஆலைகள் நடத்துகின்றனர். சாராய ஆலைகளால் த.வெ.க.,வினர் எந்தப்பயனும் அடையவில்லை. கொரோனா காலத்தில் மது குடிக்காமல் இருக்க முடியும் என மக்கள் நிரூபித்துக் காட்டினர். திராவிட கட்சிகள் சாராயம் விற்று தான் அரசை நடத்த முடியும் என்ற மூடநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளனர். மதுக்கடைகளை மூடினால் விஜய் ஆட்சிக்கு நல்ல பெயர் கிடைக்கும்.

கவர்னர் மீது அமைச்சர் நிர்மல் குமார் கடுமையான விமர்சனங்களை வைக்கிறார். கம்யூ., துாண்டுதலின் பெயரில் அமைச்சர் நிர்மல் குமார் கவர்னர் மீது மோதல் போக்கை உருவாக்கியுள்ளார். இதற்கு முன்பு மத்திய அரசின் மீதும் கவர்னர் மீதும் தி.மு.க., மோதல் போக்கை கடைபிடித்தது.

கட்சி மாறும் கலாசாரத்தை விஜய் ஊக்குவிக்க கூடாது. எம்.எல்.ஏ.,க்கள் 6 மாதங்களில் ராஜினாமா செய்வது, ஓட்டு போட்ட மக்கள் முகத்தில் கரி பூசுவது போல் ஆகிவிடும். ஆர்.எஸ்.எஸ்., பெற்ற பிள்ளை விஜய் என கடும் விமர்சனம் செய்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இன்று விஜய் கூட்டணியில் இருக்கிறார்.

மத்திய அரசோடு இணைந்து நல்ல திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டுவர முதல்வர் விஜய் முன்வர வேண்டும். முதல்வர் ஹிந்துக்களின் பண்டிகைக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும். திராவிட மாடல் போல் இருக்கக்கூடாது. கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்று இல்லாமல் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும்.

கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை என்பது ஏற்புடையதல்ல. இது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகும். ஊழல் வழக்கில் சிக்கியுள்ள தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் நேர்மையாக நீதிமன்றத்தை சந்தித்து நிரபராதி என நிரூபிக்க வேண்டும் என்றார்.