விக்சித் பாரத் ஜி ராம் ஜி திட்டத்தில் தமிழகத்துக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு
6 ஆடி 2026 திங்கள் 12:07 | பார்வைகள் : 343
விக்சித் பாரத் ஜி ராம் ஜி' திட்டத்தை செயல்படுத்த, முதல் தவணையாக, அனைத்து மாநிலங்களுக்கு, 25,863 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.தமிழகத்துக்கு, 2,000 கோடி ரூபாய், புதுச்சேரிக்கு, 13 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு அறிவித்தபடி, நாடு முழுதும், கடந்த 1 முதல், 'விக்சித் பாரத் ஜி ராம் ஜி' திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான சிவ்ராஜ் சிங் சவுகான், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, 'விக்சித் பாரத் ஜி ராம் ஜி' திட்டத்தை செயல்படுத்த, முதல் தவணையாக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, 25,863 கோடி ரூபாய் நிதியை அவர் விடுவித்தார். இதன் மூலம், தமிழகத்துக்கு, 2,176.84 கோடி ரூபாய், யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு, 12.88 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஜூலை முதல் செப்., வரையிலான காலத்துக்கு, இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில், மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியதாவது: நாடு முழுதும் எந்த தடங்கலுமின்றி, கடந்த 1ம் தேதி முதல், 'விக்சித் பாரத் ஜி ராம் ஜி' திட்டம் அமலுக்கு வந்துள்ளது. மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திலிருந்து, இந்த புதிய திட்டத்திற்கு மாறியது மிகவும் சுமுகமாக நடந்துள்ளது. இதுவரை எந்தவொரு தொழில்நுட்ப அல்லது செயல்பாட்டு சிக்கல்களும் பதிவாகவில்லை.
மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், நாடு முழுதும் முழுமையாக செயல்பாட்டுக்கு வர மூன்று ஆண்டுகளான நிலையில், இந்த புதிய திட்டம் ஒரே நாளில் அமலுக்கு வந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், கிராமப்புற தொழிலாளர்களுக்கு தினசரி ஊதியம், 10 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இனி எந்த மாநிலத்திலும் தினசரி ஊதியம், 300- ரூபாய்க்கு குறைவாக இருக்காது.
ஊதியங்களை சரியான நேரத்தில் வழங்குவது மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டுப் பொறுப்பு. மத்திய அரசு தன் முதல் தவணையை உரிய நேரத்தில் வழங்கியுள்ள நிலையில், மாநிலங்களும் தங்கள் பங்கை உடனடியாக வழங்கி, தகுதியுள்ள தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் ஊதியம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire