கியூபாவில் மீண்டும் மின்சாரக் கட்டமைப்பு முடக்கம் - தீவிரமடையும் எரிசக்தி நெருக்கடி!
7 ஆடி 2026 செவ்வாய் 06:25 | பார்வைகள் : 331
கியூபாவில் உள்ள ஒட்டுமொத்த தேசிய மின்சாரக் கட்டமைப்பும் முற்றிலும் செயலிழந்துள்ளதாகவும், இதனால், நாடு முழுவதும் முழுமையான மின்விநியோகத் தடை ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகியுள்ளதாகவும் அந்நாட்டு எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த திடீர் முடக்கத்திற்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து கியூபாவின் மின்சாரக் கட்டமைப்பு செயற்பாட்டாளர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், வைத்தியசாலைகள் மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவைகளைப் பராமரிப்பதற்காக அவசரக்கால "மைக்ரோசிஸ்டம்ஸ்" செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்நாட்டு எரிசக்தி அமைச்சர் விசென்டே டி லா ஓ லெவி தெரிவித்துள்ளார்.
கியூபாவின் இந்த தற்போதைய மின்சார நெருக்கடிக்கு, அமெரிக்கா விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளே முக்கியக் காரணம் என்று கியூபா அரசு குற்றம் சாட்டியுள்ளது.
கியூபாவிற்கு எரிபொருள் வழங்கும் முக்கிய நாடுகளை அமெரிக்கா அச்சுறுத்தி, எரிபொருள் விநியோகத்தை நிறுத்த வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கியூபா ஜனாதிபதி மிகுயெல் தியாஸ்-கானெல்,
அமெரிக்கா திட்டமிட்டே கியூபாவின் எரிபொருள் இறக்குமதியைத் தடுத்து வருவதாகவும், "மக்களை மூச்சுத்திணறச் செய்து அதன் மூலம் நாட்டில் ஒரு சமூகப் புரட்சியை ஏற்படுத்த" வொஷிங்டன் முயல்வதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நீண்டகாலமாகப் புதுப்பிக்கப்படாத, பழமையான மின்சார உள்கட்டமைப்புகள் காரணமாக கியூபாவில் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் மட்டும் ஒரே வாரத்தில் இரண்டு முறை ஒட்டுமொத்த நாடும் இருளில் மூழ்கியது.
இந்த எரிசக்தி தட்டுப்பாடு காரணமாக கல்வி, போக்குவரத்து மற்றும் மருத்துவத் துறை போன்ற அத்தியாவசிய சேவைகள் கடுமையாக முடங்கியுள்ளன. மேலும், அமெரிக்காவின் புதிய தடைகளால் கியூபாவின் பொருளாதாரமும், சுற்றுலாத் துறையும் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.
கியூபாவின் அரசியல் அமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வரவும், நேரடி அந்நிய முதலீடுகளை அனுமதிக்க வைக்கவுமே இந்த பொருளாதார நெருக்குதல்கள் தரப்படுவதாக அமெரிக்கா தரப்பில் கூறப்படுகிறது.
சமீபத்தில் கியூபா அரசு தனது பொருளாதாரத்தைத் திறப்பதற்கான சில சீர்திருத்தங்களை நாடாளுமன்றத்தில் அங்கீகரித்திருந்தது. எனினும், அமெரிக்க வெளியுறவுத்துறை இதனை "மிகவும் தாமதமான மற்றும் மேலோட்டமான கண் துடைப்பு நடவடிக்கை" என்று வர்ணித்துள்ளது.
மறுபுறம், கியூபாவில் ரஷ்யா மற்றும் சீனாவின் உளவு அமைப்புகள் செயல்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இந்த பதற்றமான சூழலுக்கு மத்தியிலும், சமீப வாரங்களில் சிஐஏ பணிப்பாளர் ஜோன் ராட்க்ளிஃப் உள்ளிட்ட உயர் மட்ட அமெரிக்க அதிகாரிகள் கியூப அதிகாரிகளுடன் தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire