Paristamil Navigation Paristamil advert login

முருகன் பற்றிய தெலுங்கு படத்தை சீமான் எதிர்ப்பதில் உள்நோக்கம்; அர்ஜுன் சம்பத்

முருகன் பற்றிய தெலுங்கு படத்தை சீமான் எதிர்ப்பதில் உள்நோக்கம்; அர்ஜுன் சம்பத்

7 ஆடி 2026 செவ்வாய் 11:41 | பார்வைகள் : 302


முருகன் பற்றிய தெலுங்கு படத்தை சீமான் எதிர்ப்பதில் உள்நோக்கம் இருப்பதாக, ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கண்டனம் தெரிவித்தார்.

அவரது அறிக்கை: தமிழ்க்கடவுள் முருகன் பற்றிய திரைப்படத்தில், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்., நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முருக கடவுளுக்கு மொழி பேதமே இல்லை. தமிழகத்தை போலவே, கர்நாடகா, ஆந்திரா, கேரளாவிலும் முருகன் கோவில்கள் ஏராளம் உள்ளன. வட மாநிலங்களில் கந்தன், கார்த்திகேயன், சுப்பிரமணியன் போன்ற பெயரில் முருகனை வழிபடுகின்றனர்.

சிவபெருமான் - பார்வதியின் மகனாக முருகன் அவதரித்த சரவண பொய்கை, இமயமலையில் உள்ளது; அங்கு முருகனுக்கு கோவிலும் உள்ளது. இன்று உலகம் முழுதும் முருக வழிபாடு பரவியுள்ளது. சமீபகாலமாக, தமிழ் தேசியம் எனும் போர்வையில், கையில் குத்தீட்டியுடன் முருகன் படத்தை வரைந்து, 'முப்பாட்டன் முருகன்' என, நாம் தமிழர் கட்சியினர் பிரசாரம் செய்கின்றனர்.

தமிழர்கள் தவிர, வேறு யாரும் முருகனை வழிபடுவதில்லை என, சீமான் பொய் பிரசாரம் செய்கிறார். ஹிந்து மதத்தில் ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி கடவுள் என இல்லை. பிரிவினையை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன், முருகனை நா.த.க.,வினர் அவதுாறு செய்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் தான், முருகனின் பெருமை பேசும் தெலுங்கு படத்தை எதிர்க்கின்றனர். சீமானின் மிரட்டலுக்கு முருகன் படக் குழுவினர் அஞ்ச வேண்டாம்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.