Paristamil Navigation Paristamil advert login

கரூர் நெரிசல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு

கரூர் நெரிசல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு

7 ஆடி 2026 செவ்வாய் 14:50 | பார்வைகள் : 341


கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் ஆதவ், ஆனந்த், நிர்மல்குமார் பேச தடை விதிக்க வேண்டும் என்று கோரி திமுக தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுத்தது. பிறகு மனுவை திமுக வாபஸ் பெற்றது.

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில், 2025 செப்., 27ல், தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இது குறித்து, உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில், சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இது தொடர்பாக, தமிழக வெற்றிக் கழக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம் சி.பி.ஐ., பல முறை விசாரணை நடத்தி உள்ளது.

இந்த சூழலில், சுப்ரீம்கோர்ட்டில் தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி சமீபத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தார். அதில், 'கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரிக்கும் நிலையில், வழக்கின் தன்மையை மாற்றும் வகையில், தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொதுவெளியில் தொடர்ந்து அவதுாறான கருத்துகளை பேசி வருகிறார். இது, சாட்சிகளை அச்சுறுத்தும் செயல்.

'இந்த செயல் சி.பி.ஐ.,யின் நடுநிலையான விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுவதாகும். முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்டோர் இந்த வழக்கு குறித்து பொதுவெளியில் பேச தடை விதிக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என, சுப்ரீம்கோர்ட் நீதிபதி அசானுதீன் அமானுல்லா தலைமையிலான விடுமுறை கால சிறப்பு அமர்வில், தி.மு.க., முறையிட்டது.

இந்த வழக்கு இன்று (ஜூலை 07) சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் விஸ்வநாதன், அலோக் ஆராதே அமர்வு முன் விசாரணை தொடங்கியது. வழக்கு விசாரணை தொடங்கியதும், ''நீங்கள் பேச்சு சுதந்திரத்துக்கு தடை கேட்கிறீர்களா? அவர்கள் பேசினால், அதை எதிர்த்து நீங்களும் பேசலாமே?  இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடந்து வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்,'' என்று திமுக தரப்பு வக்கீலிடம் நீதிபதி விஸ்வநாதன் கேள்வி எழுப்பினார்.

திமுக தரப்பு வக்கீல் ரஞ்சித் குமார், ''குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், நெரிசலில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம், அரசு வேலை வழங்குவதாக கூறி, இந்த வழக்கில் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அது வழக்கு விசாரணையை பாதிக்கும். இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் பேசக்கூடாது,'' என்றார்.

நீதிபதி விஸ்வநாதன், ''முதல்வரின் செய்தியை சுப்ரீம் கோர்ட் ஒழுங்குபடுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? நிவாரண உதவி, கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவது எப்படி வழக்கு விசாரணையை பாதிக்கும்,'' என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு திமுக வக்கீல் ரஞ்சித் குமார், ''இந்த வழக்கில் முதல்வர் விஜய் தான் முதல் குற்றவாளி. அரசின் தலைவராகவும் இருக்கிறார்,'' என்றார்.

அதற்கு நீதிபதி விஸ்வநாதன், ''''இந்த வழக்கில் முதல்வர் குற்றவாளி கிடையாது. முதல் தகவல் அறிக்கையிலும் அவர் பெயர் இல்லை. ஆனால் இன்று இந்த நீதிமன்றத்தை அரசியல் மேடை ஆக்குகிறீர்கள், அது எப்படி,'' என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

பதிலுக்கு திமுக தரப்பு வக்கீல் முன் வைத்த வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை. நீதிபதி விஸ்வநாதன், ''நீங்கள் என்ன செய்ய வேண்டும் அல்லது என்ன செய்யக்கூடாது என்று எனக்குத் தெரியாது. ஆனால், இந்த மனுவை, நீங்கள் வலியுறுத்தாமல் இருப்பதே உங்களுக்கு நல்லது. இந்த மனுவை தள்ளுபடி செய்யவே நாங்கள் விரும்புகிறோம்,'' என்றார். இதன்பிறகே, திமுக தரப்பு வக்கீல் ரஞ்சித் குமார், தாங்கள் மனுவை வாபஸ் பெறுவதாக ஒப்புக்கொண்டார்.

திமுகவுக்கு பின்னடைவு

தமிழக முதல்வர் விஜய் வரும் 10ம் தேதி கரூர் செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரண உதவி, வேலை வாய்ப்பு போன்றவற்றை அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த நிகழ்வின்போது, கரூர் நெரிசல் துயர சம்பவத்தில் என்ன நடந்தது என்று முதல்வர் விரிவாக பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு முதல்வர் அல்லது அமைச்சர்கள் பேசினால், தங்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று அஞ்சியே திமுக தரப்பில் இப்படி ஒரு மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், அதை நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர். இது, திமுகவுக்கு அரசியல் ரீதியாக ஏற்பட்ட மூக்குடைப்பு என்றே கருதப்படுகிறது.