Paristamil Navigation Paristamil advert login

இரு விஜயபாஸ்கர்களுக்கு பதவி? த.வெ.க.,வில் கடும் எதிர்ப்பு

இரு விஜயபாஸ்கர்களுக்கு பதவி? த.வெ.க.,வில் கடும் எதிர்ப்பு

7 ஆடி 2026 செவ்வாய் 15:52 | பார்வைகள் : 588


தமிழக வெற்றி கழகத்தில் சமீபத்தில் இணைந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் புதுக்கோட்டை சி.விஜயபாஸ்கர் மற்றும் கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருவருக்கும் மண்டல பொறுப்பு வழங்க, த.வெ.க.,வில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அ.தி.மு.க.,வில் இருந்து த.வெ.க.,விற்கு வந்த சி.விஜயபாஸ்கருக்கு, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல பொறுப்பாளர் பதவி வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு, கொங்கு மண்டல பொறுப்பாளர் பதவி வழங்கவும் ஆலோசனை நடந்து வருகிறது.

இதற்கு, முதல்வர் விஜய் ஒப்புதல் அளித்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இருவருக்கும் மிகப்பெரிய பொறுப்பை தர, த.வெ.க.,வில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

த.வெ.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:

பணபலம், படைபலம் கொண்டவர்கள் என்பதால், கட்சி தாவிய இரு விஜயபாஸ்கர்களுக்கும் மண்டல பதவி வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால், தேர்தலில் வெற்றி பெற உழைத்தவர்களுக்கு பதவி வழங்குமாறு, த.வெ.க., நிர்வாகிகள் சிலர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இதன் பின்னணியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமின்றி, த.வெ.க., மாவட்ட செயலர்களும் உள்ளனர். மீறி பதவி வழங்கினால், போராட்டம் நடத்துவதாகவும் சிலர் எச்சரித்து உள்ளதால், மண்டல பொறுப்பாளர் பதவி வழங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட முடியாத நிலை உள்ளது. இவ்வாறு கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.