Paristamil Navigation Paristamil advert login

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - நாமல் வெளியிட்ட அறிவிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - நாமல் வெளியிட்ட அறிவிப்பு

7 ஆடி 2026 செவ்வாய் 18:34 | பார்வைகள் : 900


நீர்கொழும்பு மோதல் சம்பவத்தை முதல் நாளே முறையாக கட்டுப்படுத்தியிருந்தால் இரண்டாம் நாள் மோதல் ஏற்பட்டிருக்காது. மோதல் தீவிரமடைவதற்கான சூழலை அரசாங்கமே ஏற்படுத்திக் கொடுத்தது. போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கை ஊடான கைதுகளினால் சிறைச்சாலை நெரிசல் தீவிரமடைந்துள்ளது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) நடைபெற்ற தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் அரசாங்கத்தின் பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளது. முதல் நாள் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை முறையாக கட்டுப்படுத்தியிருந்தால் இரண்டாம் நாள் மோதல் ஏற்பட்டிருக்காது. ஆனால் அரசாங்கம் அவ்வாறு ஒன்றும் செய்யவில்லை.

அரச நிர்வாக கட்டமைப்பு முழுமையாக அரசியல் மயமாகியுள்ளதால் அரச ஊழியர்களால் தனித்துவமான முறையில் தீர்மானம் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தீவிரமடைவதற்கான சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

2020ஆம் ஆண்டு இவ்வாறான சம்பவம் இடம்பெற்றது. அப்போது சிறைச்சாலைக்கு பொறுப்பான அமைச்சர் பதவி விலகினார். அதனைத் தொடர்ந்து சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.ஆனால் தற்போது அவ்வாறான தன்மை ஏதும் இடம்பெறவில்லை.

சிறைச்சாலைகளில் 10 ஆயிரம் கைதிகள் இருப்பதற்கான பௌதீக வளமே காணப்படுகிறது.ஆனால் தற்போது போதைப்பொருள் தொடர்பான கைதுகள் தீவிரமடைந்துள்ளன. 40 மற்றும் 45 ஆயிரம் பேரை சிறையில் அடைக்கும் போது சிறைச்சாலையின் நெரிசல் நிலை மேலும் தீவிரமடையும் தற்போதும் அவ்வாறான நிலைமையே காணப்படுகிறது என்றார்.