Paristamil Navigation Paristamil advert login

5% எத்தனால் கலந்த பெட்ரோல் அறிமுகமா? மத்திய அரசு மறுத்துள்ளது

5% எத்தனால் கலந்த பெட்ரோல் அறிமுகமா? மத்திய அரசு மறுத்துள்ளது

8 ஆடி 2026 புதன் 07:34 | பார்வைகள் : 222


விரைவில், 'இ - 25' பெட்ரோல் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படும் செய்திகளை மத்திய அரசு மறுத்துள்ளது. 'தற்போதுள்ள, 'இ - 20'  அளவைத் தாண்டி, எத்தனால் கலப்பு விகிதத்தை அதிகரிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை' என, அரசு தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது.

நாட்டில் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் நோக்கில், சாதாரண பெட்ரோல் உடன், 20 சதவீத எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல், 'இ - 20' பெட்ரோல் என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை பெட்ரோல், அனைத்து பங்க்குகளிலும் தற்போது விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், பெட்ரோலில் எத்தனால் கலப்பின் விகிதத்தை 25 சதவீதமாக அதிகரித்து, 'இ - 25' பெட்ரோலை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவின.

பெட்ரோலில் எத்தனால் கலப்பு அதிகரிக்கப்படும்போது, வாகனங்களின் செயல்பாடுகள் மற்றும் எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றில் பாதிப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. இதை, மத்திய பெட்ரோலிய துறை அதிகாரிகள் முழுமையாக மறுத்துள்ளனர்.

இது குறித்து டில்லியில் நேற்று அவர்கள் கூறியதாவது:

விரிவான சோதனைகள் மற்றும் மதிப்பீடுகளுக்குப் பிறகே,  இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக, 'இ - 20' பெட்ரோல் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

அதன்படி, 20 கோடி இரு சக்கர வாகனங்களும், 20 லட்சம் நான்கு சக்கர வாகனங்களும், எத்தனால் கலந்த எரிபொருளில் இயங்கி வருகின்றன. எனவே, இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.

தற்போதுள்ள, 'இ - 20' அளவைத் தாண்டி, எத்தனால் கலப்பு விகிதத்தை அதிகரிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எதிர்கால நடவடிக்கைகள் அறிவியல் பூர்வமான சோதனைகள் மற்றும் தொழில்நுட்ப ரீதியான உறுதிப்படுத்தல்களின் அடிப்படையிலேயே அமையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.