Paristamil Navigation Paristamil advert login

த.வெ.க., அரசை கூட்டணி கட்சிகளே கவிழ்த்து விடும்: பழனிசாமி

த.வெ.க., அரசை கூட்டணி கட்சிகளே கவிழ்த்து விடும்: பழனிசாமி

8 ஆடி 2026 புதன் 10:48 | பார்வைகள் : 199


த.வெ.க., அரசை, அந்த கட்சியுடன் இருக்கும் கூட்டணி கட்சிகளே கவிழ்த்து விடும்” என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்தும், கட்சியின் அடுத்தகட்ட பணிகள் குறித்தும், மாவட்ட அளவிலான நிர்வாகிகளுடன் ஆலோசனை நடந்து வருகிறது. அதன்படி, ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகளுடன், சென்னையில் அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், நேற்று பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

அப்போது, பழனிசாமி பேசியுள்ளதாவது:

சட்டசபை தேர்தலில், த.வெ.க., முழுமையான வெற்றி பெறவில்லை. தி.மு.க.,வில் இருந்த கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு, பொய்க்கால் குதிரை அரசாகத்தான், இந்த அரசு நடக்கிறது. தி.மு.க., ஆட்சியின் நீட்சியாக, சட்டம் - ஒழுங்கு பிரச்னை, பாலியல் வன்கொடுமை என, தினமும் நடக்கிறது.

ஆனால், முதல்வர் விஜயும் அவரது அமைச்சர்களும், 'ரீல்ஸ்' எடுப்பதில் தான் குறியாக இருக்கின்றனர். இப்போது, த.வெ.க., அரசுக்கு முட்டு கொடுக்கும் கூட்டணி கட்சியினரே, த.வெ.க., அரசை எந்நேரம் வேண்டுமென்றாலும் கவிழ்த்து விடுவர்.

உள்ளாட்சித் தேர்தலுக்கு, இப்போதில் இருந்தே தயாராக வேண்டும். கட்சிக்கு நேர்மையாக, விசுவாசமாக இருப்பவர்கள் பெயரை மட்டும் பரிந்துரை செய்யுங்கள்; 'சீட்' கொடுங்கள். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று விட்டால், நிச்சயம் ஆட்சிக்கு வந்து விடலாம். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

இரு எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணிப்பு

பழனிசாமி நடத்திய ஆலோசனை கூட்டத்தில்,ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ.,வான முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, ஆற்காடு எம்.எல்.ஏ., சுகுமார் இருவரும் பங்கேற்கவில்லை. இருவரும், முன்னாள் அமைச்சர்கள் சண்முகம், வேலுமணி ஆகியோருடன் இணைந்து செயல்பட்டு வந்தனர். த.வெ.க.,வில் அமைச்சர் பதவி கேட்டு கிடைக்காததால், மீண்டும் பழனிசாமி பக்கம் வந்தனர். எனினும், இருவரின் மாவட்ட செயலர் பதவிகளை பழனிசாமி திருப்பி தராததால், நேற்றைய கூட்டத்தில் அவர்கள் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், சுகுமார் அளித்த விளக்கத்தில், 'கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து துணை பொதுச்செயலருக்கு தகவல் அனுப்பி விட்டேன். எனக்கு பொதுச்செயலர் பழனிசாமிதான். வேறு கட்சிக்கு செல்ல 100 சதவீதம் வாய்ப்பில்லை; சுடுகாட்டுக்கு போனாலும் வேறு கட்சிக்கு போக மாட்டேன். கே.சி.வீரமணி, சீனா சென்றதால் பங்கேற்கவில்லை' என தெரிவித்துள்ளார்.

அனுபவமற்றவர்கள் ஒன்று கூடி மடம் கட்டுவது போல், ஒரு ஆட்சியை த.வெ.க.,வினர் அமைத்துள்ளனர். தேர்தல் நேரத்தில் வாயில் வந்ததையெல்லாம் வாக்குறுதிகளாக அளித்து விட்டு, அதை எப்படி நிறைவேற்றுவது என தெரியாமல் திணறுகின்றனர். கடிவாளம் இல்லாத குதிரை போல், த.வெ.க., ஆட்சி தறிகெட்டு ஓடுகிறது.

அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு, பல லட்சம் ரூபாய் பேரம் பேசப்படுவதாக, த.வெ.க.,வை சேர்ந்த பெண் வழக்கறிஞரே வழக்கு தொடுத்துள்ளார். குழந்தைகள், கடற்கரை மணலில் கோபுரம் கட்டி விளையாடுவது போல் இந்த ஆட்சியாளர்கள், அரசை கையில் வைத்துக் கொண்டு விளையாட்டு காட்டி வருகின்றனர். மக்களின் புகார், முதல்வர் விஜய் காதுகளில் விழுகிறதா என தெரியவில்லை.

- பழனிசாமி, பொதுச்செயலர் அ.தி.மு.க.