Paristamil Navigation Paristamil advert login

மக்கள் தீர்ப்புக்கு மாறாக எதுவும் நடக்காது; அமைச்சர் ரமேஷ்

மக்கள் தீர்ப்புக்கு மாறாக எதுவும் நடக்காது; அமைச்சர் ரமேஷ்

8 ஆடி 2026 புதன் 11:09 | பார்வைகள் : 192


தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில், மக்கள் தீர்ப்புக்கு மாறாக எதுவுமே நடக்காது,'' என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.

திருச்சி - ஸ்ரீரங்கத்தில் அவர் அளித்த பேட்டி:

தமிழக பட்ஜெட்டில், கோவில்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கவும், வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள், இடிந்த நிலையில் உள்ள கோவில்கள், வழிபாடு இல்லாத கோவில்கள் கண்டறியப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளவும் முக்கியத்துவம் தரப்படும்.

கோவில்களில் அடிப்படை வசதிகளுடன் சேர்த்து, மக்கள் திட்டங்களும் நிறைவேற்றப்படும். திருச்செந்துார் கோவிலில் சேவை கட்டணங்களை உயர்த்துவது பற்றி மக்கள் கருத்து கேட்பு அறிவிப்பு தான் வெளியிடப்பட்டது. ஆனால், மக்களை துாண்டும் நோக்கில், தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். புதிய கட்டண நிர்ணயம், மக்கள் கருத்தின் அடிப்படையில் தான் முடிவு செய்யப்படும். இந்த ஆட்சியில், மக்கள் தீர்ப்புக்கு மாறாக எதுவுமே நடக்காது.

அனைத்து கோவில்களிலும், வி.ஐ.பி., தரிசனத்தை முறைப்படுத்த ஆலோசித்து வருகிறோம். கோவில் நடைமுறைகள் உடனடியாக, முழுமையாக மாற்றி அமைத்து விட முடியாது. ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் பெயரில் போலி இணையதளம் தொடங்கப்பட்டது குறித்து, வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். அரசு தரப்பில், யாத்ரி நிவாஸ் முன்பதிவுக்கு இணையதளம் துவங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.