Paristamil Navigation Paristamil advert login

'பாவி' சூறாவளி தாய்வானை நோக்கி நகர்வு- ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கு எச்சரிக்கை!

'பாவி' சூறாவளி தாய்வானை நோக்கி நகர்வு- ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கு எச்சரிக்கை!

9 ஆடி 2026 வியாழன் 14:31 | பார்வைகள் : 141


பசிபிக் பெருங்கடலில் மணிக்கு சுமார் 200 கிலோமீற்றர் வேகத்திலான பலத்த காற்றுடன் தீவிரமடைந்துள்ள 'பாவி'  சூறாவளி தாய்வானை நோக்கி நகர்ந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது 2024 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைத் தாக்கவுள்ள மிகக் கடுமையான சூறாவளியாக அமையக்கூடும் என்பதால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

சுமார் 1,000 கிலோமீற்றர் சுற்றளவைக் கொண்ட இந்த பிரம்மாண்ட சூறாவளி, வரும் சனிக்கிழமை மாலை சீனாவின் கிழக்கு புஜியான்  மாகாணத்திற்குள் நுழைவதற்கு முன்னதாக, வடக்கு தைவான் பகுதிக்கு மிக அருகில் பயணிக்கும் என சீன தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

1987 ஆம் ஆண்டிற்குப் பின்னர் தாய்வானைத் தாக்கவுள்ள மிகப்பெரிய சூறாவளி இதுவெனவும், சமீபத்திய ஆண்டுகளில் இவ்வளவு பெரிய சூறாவளிகள் உருவாவது மிக அரிதானது எனவும் தைவான் வானிலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

காலநிலை மாற்றம் காரணமாக சீனா, ஜப்பான் மற்றும் தைவான் ஆகிய நாடுகள் இவ்வாறான அழிவுகரமான வானிலை நிலைமைகளை எதிர்கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்த ஆண்டில் நிலவும் 'எல் நினோ'  நிலைமை காரணமாக கடல் வெப்பநிலை உயர்ந்துள்ளமை, இவ்வாறான கொடூர சூறாவளிகள் அடிக்கடி உருவாவதற்குக் காரணியாக அமைந்துள்ளது.

தாய்வான் ஜனாதிபதி லாய் சிங்-டே  தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மூன்று நாட்களுக்குத் தேவையான உணவு, கைவிளக்குகள்  உள்ளிட்ட அவசரக்கால உதவிப் பொருட்களை  தயார் நிலையில் வைத்திருக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் ஒகினாவா  தீவு மக்களுக்கு கடுமையான காற்று, மண்சரிவு, வெள்ளப்பெருக்கு மற்றும் கடல் அலைகள் சீற்றத்துடன் கரையைக் கடந்து செல்வது  தொடர்பில்  தீவிர அவதானத்துடன் இருக்குமாறு எச்சரித்துள்ளது.

லண்டன் இம்பீரியல் கல்லூரியின் வெப்பமண்டல சூறாவளி ஆய்வாளர் சியாங்போ ஃபெங்  இது குறித்துத் தெரிவிக்கையில், "இந்த சூறாவளி கடலில் நீண்ட காலம் தங்கியிருந்து, வெப்பமான கடல் நீரிலிருந்து அதிகளவிலான ஆற்றலையும் ஈரப்பதத்தையும் உறிஞ்சியுள்ளது. எனவே, இது கரையை கடக்கும் போது ஏற்படும் சேதங்கள் மிகக் கொடூரமானதாக  அமையலாம்" என எச்சரித்துள்ளார். அத்துடன், சூறாவளி நகரும் பாதையில் ஏற்படும் சிறிய மாற்றம் கூட மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.