விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக தரையிறக்கும் சோதனை வெற்றி
10 ஆடி 2026 வெள்ளி 08:41 | பார்வைகள் : 147
ககன்யான் விண்கலத்தில் இருந்து, விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக தரையிறக்கும், இஸ்ரோவின் பாராசூட் சோதனை வெற்றி பெற்றுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி, அங்கு தங்க வைத்து, மீண்டும் பூமிக்கு அழைத்து வரும், 'ககன்யான்' கனவு திட்டத்திற்காக, பலகட்ட சோதனைகளை செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நேற்று, மத்திய பிரதேச மாநிலம், சியோப்பூரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் சோதனை மையத்தில், விண்வெளி வீரர்கள் பயணம் செய்யும் விண்கலத்தின் வேகத்தை குறைத்து, அவர்களை பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வரும், 'ஐமேட் - 05' எனும் ஒருங்கிணைந்த, 'பாராசூட் ஏர் டிராப்' சோதனையை நடத்தியது.
விண்வெளியில் இருந்து திரும்பும் விண்கலம், வளிமண்டலத்துக்குள் நுழையும்போது, ஒலியின் வேகத்தை விட அதிவேகத்தில் வரும். அந்த வேகத்தை கட்டுப்படுத்துவது தான், ஒருங்கிணைந்த பாராசூட்டுகளின் பணி.
இதை சோதிக்கும் வகையில், ககன்யான் விண்கலத்தின் எடையை ஒத்த, 5 டன் போலி மாதிரி பெட்டகத்தை, இந்திய விமானப்படையின் ஐ.எல் - 76 கனரக போர் விமானம் சுமந்து சென்றது. அது, பூமியிலிருந்து, 2,500 மீட்டர் உயரம் சென்றதும், விண்கல மாதிரியை கீழே வீசியது.
மாதிரி விண்கலம் வீசப்பட்ட மைக்ரோ வினாடிகளில், கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி அமைப்பின் வாயிலாக, 10 பாராசூட்டுகள் அடுத்தடுத்து விரிந்தன. இதனால் விண்கலம் காற்றில் தள்ளாடாமல், நேர்கோட்டில் நிறுத்தப்பட்டு, மெதுவாக தரையிறக்கப்பட்டது.
ககன்யான் விண்கலத்தின் எடையை தாங்கி, காற்றின் விசையை சமாளித்து, விண்வெளி வீரர்களை பத்திரமாக கடலில் இறக்கி, மீட்கும் பாராசூட் தொழில்நுட்பத்தில், இஸ்ரோ வெற்றி பெற்றுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire