Paristamil Navigation Paristamil advert login

போக்குவரத்து துறையின் எதிர்காலம் ஹைட்ரஜன் எரிபொருள்: நிதின் கட்கரி

போக்குவரத்து துறையின் எதிர்காலம் ஹைட்ரஜன் எரிபொருள்: நிதின் கட்கரி

11 ஆடி 2026 சனி 10:28 | பார்வைகள் : 126


நம் நாட்டில் போக்குவரத்துத் துறையின் எதிர்காலம் ஹைட்ரஜன் எரிபொருள் தான்; நாடு முழுதும், 10 வழித்தடங்களில் இதன் பயன்பாடு குறித்த சோதனைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது,” என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் காந்திநகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:

சுற்றுச்சூழல் மாசை குறைக்கவும் பெட்ரோல், டீசல் இறக்குமதியை தவிர்க்கவும் மாற்று எரிபொருளாக ஹைட்ரஜன் திகழும். இது, நம் போக்குவரத்து துறையின் எதிர்காலமாக திகழும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. அதற்கான பணிகளை, மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

மாற்று எரிபொருள் மற்றும் உயிரி எரிபொருள் துறையில் சிறப்பாக செயல்படும் நிலையில், தொழில்நுட்பம் மற்றும் செலவு அடிப்படையில் உலக அளவில் நம் நாடு முன்னிலை வகிக்கும். எனவே, ஹைட்ரஜன் எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், நாடு முழுதும் 10 வழித்தடங்களில் சோதனை நடத்தி வருகிறோம்.

கிரேட்டர் நொய்டா - டில்லி - ஆக்ரா, புவனேஸ்வர் - கோனார்க் - புரி, ஆமதாபாத் - வதோதரா - சூரத், சாஹிபாபாத் - பரிதாபாத் - டில்லி, புனே - மும்பை, ஜாம்ஷெட்பூர் - கலிங்கா நகர், திருவனந்தபுரம் - கொச்சி, கொச்சி - எடப்பள்ளி, ஜாம்நகர் - ஆமதாபாத், விசாகப்பட்டினம் - பய்யாவரம் ஆகிய வழித்தடங்களில் இந்த சோதனை நடக்கிறது. இதன் மூலம், துாய்மையான பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த வழிவகை செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

ரயில் சேவைக்கு ஒப்புதல்!

நம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலை இயக்க, ரயில்வே வாரியம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்தது. தமிழகத்தின் சென்னை ஐ.சி.எப்.,ல் வடிவமைக்கப்பட்ட இந்த ரயில், முதன்முதலாக ஹரியானா மாநிலத்தின் ஜிந்த் -- சோனிபட் இடையே இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஜெர்மனி, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இந்த அதிநவீன பசுமைத் தொழில்நுட்பப் பட்டியலில் இணைந்துள்ளது.

சோதனை ஓட்டங்களில் மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்ட இந்த ஹைட்ரஜன் ரயில், வணிக ரீதியான இயக்கத்திற்கு மணிக்கு 75 கி.மீ., வேகத்தில் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இந்த ரயில் சேவையை, வரும் 17ல் பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைக்க உள்ள நிலையில், ரயிலின் சாதாரண கட்டணம் 5 முதல் 25 ரூபாய் வரை மட்டுமே இருக்கும் எனவும் கூறப்படுகிறது.