Paristamil Navigation Paristamil advert login

கரூர் நெரிசலில் பலியானோர் குடும்பத்தினருக்கான அரசு பணி நியமனம் தற்காலிகமானதே: ஐகோர்ட்

கரூர் நெரிசலில் பலியானோர் குடும்பத்தினருக்கான அரசு பணி நியமனம் தற்காலிகமானதே: ஐகோர்ட்

11 ஆடி 2026 சனி 11:28 | பார்வைகள் : 129


கரூரில், த.வெ.க., பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு பணி நியமனம் வழங்க தடையில்லை. பணி நியமனம் தற்காலிகமானதே. அது இந்நீதிமன்ற இறுதி உத்தரவை பொறுத்து அமையும்' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால உத்தரவிட்டது.

கரூர் த.வெ.க., பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, அரசு பணி வழங்க தடை விதிக்கக்கோரி, மதுரை நாம் தமிழர் கட்சி நிர்வாகி தீரன் திருமுருகன், மனித நேய ஜனநாயக கட்சி மாநில துணை செயலர் சீனி அகமது உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு நேற்று விசாரித்தது. மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் கிளீட்டஸ், முகமது ரஷீத், ஜின்னா, தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் சரவணன் ஆஜராகினர்.

நீதிபதிகள், 'இறந்தவர்களின் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது. பணி வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. இதில், எத்தகைய குறைபாடு உள்ளதாக கருதுகிறீர்கள்' என, கேள்வி எழுப்பினர்.

மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள், 'கருணை பணி நியமனம் எத்தகைய சூழலில் வழங்க வேண்டும் என்பது குறித்து 2020ல் பிறப்பித்த அரசாணையில் வழிகாட்டுதல்கள் இடம் பெற்றுள்ளன.

அதை பின்பற்ற வேண்டும் அல்லது அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். இவ்விரு அம்சங்களையும் இவ்விவகாரத்தில் பின்பற்றவில்லை. இதனால், வேலைவாய்ப்பில் அரசியலமைப்பு வழங்கியுள்ள சமநீதி, சமவாய்ப்பு மீறப்பட்டுள்ளது.

கும்பகோணம் மகாமகம் சம்பவம், துாத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கிச்சூடு, தர்மபுரி பஸ் எரிப்பு, கள்ளக்குறிச்சி சாராய மரணம், சென்னையில் வெள்ள நிவாரணம் வழங்கும் போது கூட்ட நெரிசலில் மரணம் போன்ற நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு கருணை பணி நியமனம் வழங்கவில்லை. இழப்பீடு வழங்கப்பட்டது.

உரிமை கோருவர் 'கரூர் சம்பவத்திற்கு கருணை பணி நியமனம் வழங்கினால், எதிர்காலத்தில் இதையே முன்னுதாரணமாக கொண்டு, மேலும் பலர் வேலை வழங்க உரிமை கோருவர்' என்றனர்.

அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் சரவணன், 'இதுபோன்ற நிவாரணம் கோரி உச்சநீதிமன்றத்தில் ஒரு கட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு வாபஸ் பெறப்பட்டது. மனுதாரர் சட்டப்பூர்வ முறையில் தீர்வு தேட உச்சநீதிமன்றம் அனுமதித்தது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஏற்கனவே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

'துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி நியமனம் வழங்கப்பட்டது.

இதுபோன்ற சூழல்களில் கருணை பணி நியமனம் வழங்குவது வழக்கமாக உள்ளது. கரூரில் பாதிக்கப்பட்டோருக்கு கருணை பணி வழங்குவதை தடுக்கும் நோக்கில் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என்றார்.

நீதிபதிகள், 'அரசு பணி வழங்குவது குறித்து சட்டசபையில் அறிவிப்பு வெளியானதா?' என, கேள்வி எழுப்பினர்.

மனுதாரர் தரப்பு, 'முந்தைய அரசு இழப்பீடு வழங்கியது. தற்போதைய அரசு பணி நியமனம் வழங்குகிறது. கரூர் கூட்ட நெரிசல் மரணத்திற்கு தற்போதைய ஆளுங்கட்சியான த.வெ.க., தான் முழு பொறுப்பு' என்றது.

நீதிபதிகள், 'இது அரசியல் மேடை அல்ல; நீதிமன்றம். கவனமாக வாதத்தை முன்வைக்க வேண்டும்' என, எச்சரித்தனர்.

மனுதாரர்கள் தரப்பு, 'அரசு பணியில் இருக்கும் போது ஒருவர் இறந்தால், அவரது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவதற்கு கடும் விதிகள், தகுதி சரிபார்ப்புகள் உள்ளன. ஆனால், கரூர் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு வேலை வழங்குவது நடைமுறையிலுள்ள விதிகளுக்கு எதிரானது' என, வாதம் நடந்தது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

முன்னுதாரணமாக துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதாக அரசு தரப்பு தெரிவித்தது. அச்சம்பவம் அரசின் வரம்பு மீறிய நடவடிக்கையால் நிகழ்ந்தது என வேறுபடுத்தி கூறலாம்.

இருப்பினும், அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடுவதற்கான வாய்ப்பு மிக குறுகியது. திட்டமிட்டபடி பணி நியமன உத்தரவுகளை வழங்கும் நிகழ்ச்சியை நடத்தலாம். ஆனால், இவ்வேலைவாய்ப்புகள் அனைத்தும் முற்றிலும் தற்காலிகமானவை. அவை இந்நீதிமன்றத்தின் இறுதி உத்தரவை பொறுத்து அமையும்.

பணி நியமனம் பெறுபவர்கள் தங்களின் முதல் மாத சம்பளத்தை பெறுவதற்கு முன்பாகவே, இம்மாத இறுதிக்குள் இவ்வழக்கு விசாரித்து முடிக்கப்படும்.

இவ்வழக்கில் டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர் செயலரை நீதிமன்றம் தானாக முன்வந்து ஒரு எதிர்மனுதாரராக சேர்த்துக் கொள்கிறது.

கருணை அடிப்படையில் வேலை வழங்குவதற்கான தற்போதைய வழிகாட்டுதல்கள் என்னென்ன, அவை கரூர் சம்பவத்திற்கு பொருந்துமா என்பது குறித்து டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அரசு பணி நியமனங்கள் விதிகளின்படியே வழங்கப்பட வேண்டும் என்பதையும், நியாயமான காரணமின்றி யாருக்கும் அது மறுக்கப்படக்கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். விசாரணை ஜூலை 21க்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.