ஈரானில் பிரெஞ்சு தூதரக அதிகாரிகள் இருவருக்கு அச்சுறுத்தல்: ஈரானுக்கு கடும் கண்டனம்!!
20 ஆடி 2026 திங்கள் 21:33 | பார்வைகள் : 1084
ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் பணியாற்றி வந்த பிரெஞ்சு தூதரகத்தின் இரண்டு அதிகாரிகள், ஈரான் பாதுகாப்பு சேவையினரால் பல மணி நேரம் காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவர்களில் ஒருவர் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் Jean-Noël Barrot தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தூதரக அதிகாரிகளுக்கான சர்வதேச பாதுகாப்பு மற்றும் சலுகைகளை வெளிப்படையாக மீறுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு அதிகாரிகளும் பின்னர் பிரெஞ்சு தூதரகத்திற்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது அவர்கள் பாதுகாப்பாக இருப்பதுடன், அடுத்த சில மணி நேரங்களுக்குள் பிரான்சுக்குத் திரும்புவார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் தனது முழுமையான ஆதரவு மற்றும் ஒற்றுமையை பாதிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.
மேலும், இந்த இரு அதிகாரிகளும் ஈரானின் குடிமக்கள் சமூகம், குறிப்பாக கலைஞர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கான பிரான்சின் ஆதரவு திட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில், அவர்கள்மீது இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். பிரான்ஸ் அதிகாரிகளின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்கு எதிரான இந்த கடுமையான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலுக்கு உரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire