Paristamil Navigation Paristamil advert login

பாதுகாப்பு அச்சுறுத்தல்: துபாய், ரியாத் விமான சேவைகளை நிறுத்திய ஏர் பிரான்ஸ் நிறுவனம்!!

பாதுகாப்பு அச்சுறுத்தல்: துபாய், ரியாத் விமான சேவைகளை நிறுத்திய ஏர் பிரான்ஸ் நிறுவனம்!!

21 ஆடி 2026 செவ்வாய் 07:30 | பார்வைகள் : 1168


ஈரான் வளைகுடா பிராந்திய அண்டை நாடுகள் மீது தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையில், பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு துபாய் (ஐக்கிய அரபு அமீரகம்) மற்றும் ரியாத் (சவூதி அரேபியா) நோக்கி இயக்கப்பட்டு வந்த தனது விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக ஏர் பிரான்ஸ் நிறுவனம் 20ஆம் திகதி திங்கள்கிழமை அறிவித்துள்ளது. பயணிகள் மற்றும் விமான பணியாளர்களின் பாதுகாப்பே தங்களின் முதன்மையான முன்னுரிமை எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், சேவை வழங்கப்படும் மற்றும் விமானங்கள் பறக்கும் பிராந்தியங்களில் நிலவும் புவிசார் அரசியல் சூழ்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏர் பிரான்ஸ் விளக்கியுள்ளது. இதன்படி, ரியாத் நோக்கி செல்லும் விமானங்கள் ஜூலை மாதம் 24 ஆம் திகதி வரை (ரியாத்தில் இருந்து புறப்படும் விமானங்கள் ஜூலை மாதம் 25 ஆம் திகதி வரை) நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல், துபாய் நோக்கி செல்லும் விமானங்கள் ஜூலை மாதம் 27 ஆம் திகதி வரை (துபாயில் இருந்து புறப்படும் விமானங்கள் ஜூலை மாதம் 28 ஆம் திகதி வரை) இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை, பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து வேகமாக மாறிவருவதால், விமான சேவைகள் மீண்டும் எப்போது ஆரம்பிக்கப்படும் என்பது அப்பகுதியின் பாதுகாப்பு சூழ்நிலையை மதிப்பீடு செய்த பின்னரே தீர்மானிக்கப்படும் என ஏர் பிரான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.