Paristamil Navigation Paristamil advert login

விண்ணில் 2035க்குள் விண்வெளி நிலையம்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

விண்ணில் 2035க்குள் விண்வெளி நிலையம்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

10 ஆவணி 2026 திங்கள் 09:20 | பார்வைகள் : 418


விண்ணில் வரும், 2035க்குள், இந்தியாவுக்கான தனி விண்வெளி நிலையம் அமைக்கப்படும், என, இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.

சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மேலாண்மை கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, இஸ்ரோவின் தலைவர் நாராயணன் பேசியதாவது:  அடுத்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில், 300 செயற்கை கோள்களை விண்ணில் ஏவும்படி, இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார்.

அத்துடன், 2035க்குள், விண்ணில்  இந்தியா சொந்தமாகவே விண்வெளி நிலையத்தை அமைக்கும் இலக்குடன்  இஸ்ரோ செயல்படுகிறது.

இந்தியாவின் முதல் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யானுக்கு முன், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, மனிதரில்லா சோதனை விண்கலம், இந்த ஆண்டிற்குள் ஏவப்படும். தொடக்கத்தில் மற்ற நாடுகளின் ராக்கெட்டுகளையும், செயற்கை கோள்களையுமே இந்தியா சார்ந்திருந்தது.

தற்போது, இந்திய ராக்கெட்டுகளின் வாயிலாக, வணிக ரீதியில், 36 நாடுகளைச் சேர்ந்த, 434  வெளிநாட்டு செயற்கை கோள்களை, இந்தியா விண்ணில் செலுத்தி உள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட,  'ஆப்பரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில், 20-க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை இந்தியா பயன்படுத்தியது.

துாத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமையவுள்ள சிறிய செயற்கைக்கோள் ஏவுதளத்தின் இயக்கம் மற்றும் நிர்வாகத்தை, 986 கோடி ரூபாயில், இந்தியாவை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான பணிகளை, விண்வெளி ஒழுங்குமுறை அமைப்பான, 'இன்-ஸ்பேஸ்' தொடங்கி உள்ளது.

குலசேகரன்பட்டினத்தில், 2,233 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள, இரண்டாவது ஏவுதளம், இஸ்ரோவின் சிறிய செயற்கைக்கோள் ஏவு வாகனம், தனியார் நிறுவனங்களின் சிறிய ராக்கெட்டுகளை ஏவுவதற்கு ஏற்ப வடிவமைக்கப்படுகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட்டை ஏவும் போது, இலங்கையை சுற்றி வளைந்து செல்ல வேண்டும்.

ஆனால், இங்கிருந்து ஏவப்படும் ராக்கெட், நேரடியாக இந்திய பெருங்கடலின் மேல் செல்லும். இதனால், எரிபொருள் சிக்கனமும், செயற்கைக்கோளின் எடையும் அதிகரிக்கும்.

குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தை நிர்வகிக்க தேர்ந்தெடுக்கப்படும் தனியார் நிறுவனத்திற்கு, வணிக ரீதியிலான முதல் 3 ஏவுதல்கள் அல்லது ஓராண்டு வரை, தேவையான தொழில்நுட்ப வழிகாட்டுதல்,  செயல்பாட்டு ஆதரவு மற்றும் பயிற்சிகளை, இஸ்ரோ வழங்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.