Paristamil Navigation Paristamil advert login

முன்னாள் அமைச்சர் நேருவை தி.மு.க., அரசு பாதுகாத்தது: ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்

முன்னாள் அமைச்சர் நேருவை தி.மு.க., அரசு பாதுகாத்தது: ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்

11 ஆவணி 2026 செவ்வாய் 06:46 | பார்வைகள் : 189


நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் நியமன முறைகேடு விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் நேருவை, தி.மு.க., அரசு பாதுகாத்தது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், கடந்த 2024-, 2025ம் ஆண்டுகளில், உதவி இளநிலைப் பொறியாளர் உள்ளிட்ட 2,538 பணியிடங்கள் நியமனங்களுக்கு, 634 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்குகள், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன்,  மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் வாதாடியதாவது:

அதிகாரிகள் நியமன முறைகேடு தொடர்பாக, ஆதாரங்களுடன் அமலாக்கத் துறை கடிதம் எழுதியும், முந்தைய தி.மு.க., அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல், முன்னாள் அமைச்சர் நேருவை பாதுகாத்தது. இன்பதுரை வழக்கில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டு, 16 நாட்களுக்கு பின் தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்புக்காக காத்திருந்து விட்டு, தன் தரப்பு விளக்கத்தை கேட்கவில்லை என, நேரு தரப்பில் உரிமை கோர முடியாது.

இவ்வாறு அவர் வாதாடினார்.

அமைச்சர் நேரு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சித்தார்த் லுாத்ரா, அரவிந்த் பாண்டியன் ஆகியோர் ஆஜராகி, 'நேரு தரப்பு வாதங்களை கேட்காமல், வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டதால், நேருவின் உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை, மறு ஆய்வு செய்யக் கோரி, முந்தைய ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, தற்போதைய அரசு வாபஸ் பெற முடியாது. அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை' என வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்குப்பதிவு செய்யும்படி பிறப்பித்த உத்தரவை, மறு ஆய்வு செய்யக் கோரி, நேரு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.