Paristamil Navigation Paristamil advert login

பிரதமர் மோடியுடன் சரத்பவார் மகள் சந்திப்பு!

பிரதமர் மோடியுடன் சரத்பவார் மகள் சந்திப்பு!

11 ஆவணி 2026 செவ்வாய் 07:47 | பார்வைகள் : 263


பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், டில்லியில் பிரதமர் மோடியை, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே தலைமையில் அக்கட்சி எம்பிக்கள் சந்தித்து பேசினர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடியை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் மற்றும் அவரது மகள் சுப்ரியா சுலே ஆகியோர் சந்தித்து பேசினர்.  இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியது. தொடர்ந்து மாநில பிரச்னைகள் தொடர்பாக பிரதமர் மோடியை இன்று ( ஆகஸ்ட் 10) சுப்ரியா சுலே தலைமையில் எட்டு எம்பிக்கள் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பின் போது, 'மாநிலத்தில் அதிக மழைப்பொழிவு மற்றும் வெள்ளம், மாநிலத்திற்கு வறட்சி மற்றும் பேரிடர் நிவாரண நிதியில் இருந்துமத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்றும், மஹாத்மா ஜோதிராவ் புலே, அவரது மனைவி சாவத்ரி புலே மற்றும் அன்னா பாவு சதே ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்' என்று வலியுறுத்தியதாக எம்.பி.,க்கள் தெரிவித்தனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு  எம்பி நிலேஷ் தன்யன்தேவ் லங்கே கூறுகையில், 'விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய  வேண்டும் என வேண்டுகோள் வைத்தோம். அதிக மழைப்பொழிவால் சேதம் அடைந்த பயிர்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை.எனவே  பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவது அவசியம்.  மஹாராஷ்டிரவில் ஒவ்வொரு மாவட்டத்திலும், புற்றுநோய் மருத்துவமனை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினோம்' என்று தெரிவித்தார்.

ஆனால் உண்மையான காரணம் வேறு என்று அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.லோக்சபா தொகுதி மறு வரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாக்கள் பார்லியில் தாக்கல் செய்யப்பட உள்ளன. அதற்கான ஆதரவு திரட்டும் முயற்சியில் பாஜ ஈடுபட்டுள்ளது.

இதற்கு சரத் பவார் கட்சியின் 8 எம்.பி.,க்கள் ஆதரவை பாஜ கோரி வருகிறது. 'அவ்வாறு ஆதரவு தெரிவிப்பதாக இருந்தால், உடைந்து போன தங்கள் கட்சியை மீண்டும் ஒன்று சேர்க்க உதவ வேண்டும், மஹாராஷ்டிரா துணை முதல்வராக இருக்கும் சுனேத்ரா பவாரை, தங்கள் தலைமையை ஏற்க அறிவுறுத்த வேண்டும்' என்று சுப்ரியா சுலே- சரத் பவார் தரப்பினர் கோரியுள்ளனர்.

இந்த பின்னணியில், இரு தரப்பினரிடமும் பாஜ சார்பில் மாறி மாறி பேசி வருகின்றனர். இதற்கான முடிவு என்ன என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும்.