Paristamil Navigation Paristamil advert login

வீடு அருகே புதிய தலைமை செயலகம்: அதிகாரிகள் தீவிரம்

வீடு அருகே புதிய தலைமை செயலகம்: அதிகாரிகள் தீவிரம்

11 ஆவணி 2026 செவ்வாய் 08:59 | பார்வைகள் : 167


சென்னை பட்டினம்பாக்கத்தில், முதல்வர் விஜய் வீட்டின் அருகே, புதிய தலைமை செயலகம் அமைக்க ஆய்வு பணி நடந்து வருகிறது.

தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்த பின், பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகின்றன. அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில் பாரம்பரியமிக்க கோட்டையில் உள்ள முதல்வர் அறை, நாமக்கல் கவிஞர் மாளிகையின், 10வது மாடிக்கு மாற்றப்படுகிறது.

இந்நிலையில், தலைமை செயலகத்தையும் வேறு இடத்துக்கு மாற்ற ஆலோசனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழக அரசின் தலைமை செயலகத்தின் பெரும்பாலான பகுதிகள், ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளன. அதே போல் இட நெருக்கடியும் அதிகமாக உள்ளது. இதை கவனத்தில் கொண்டுதான், முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டோர் தலைமை செயலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற திட்டமிட்டனர்.

கருணாநிதி முதல்வராக இருந்தபோது, சென்னை திருவல்லிக்கேணியில் கட்டப்பட்ட தலைமை செயலகம், பின் முதல்வரான ஜெயலலிதாவால் மருத்துவமனையாக ஆக்கப்பட்டது. அதேபோல், ராணி மேரி கல்லுாரியில் தலைமை செயலகம் கட்ட ஜெயலலிதா முயற்சித்த போது, அதை கருணாநிதி தடுத்தார்.

அதேபோல், இரு தலைவர்களும், சென்னை பட்டினம்பாக்கம் சிக்னல் அருகே உள்ள அரசு இடத்தில் தலைமை செயலகத்தை கட்ட திட்டமிட்டனர். ஆனால், கடலுக்கு மிக அருகே தலைமை செயலகம் கட்ட, அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். அதோடு, சுனாமி, புயல் போன்ற இயற்கை பேரிடர் வர வாய்ப்பு இருந்ததால், அந்த திட்டத்தை இரு தலைவர்களும் பின்னாளில் கைவிட்டனர்.

இந்நிலையில் தான், பட்டினம்பாக்கத்தில் உள்ள 17 ஏக்கர் நிலம், புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கு சரியாக இருக்கும் என, முதல்வர் தரப்பு நினைக்கிறது. அங்கிருந்து நடக்கும் துாரத்திலேயே முதல்வரின் ஒரு வீடும் இருக்கிறது. குறிப்பாக, கடலை பார்த்து ரசிக்க வேண்டும் என்று தான், கோட்டையில் அவரது அறை மாற்றப்பட்டது. தற்போது கடலுக்கு மிக அருகே பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டினால் நன்றாக இருக்கும் என, முதல்வர் விஜயும் விருப்பப்படுகிறார்.

எனவே தான், அந்த இடத்தில், அரசு பொறியாளர்கள் முதற்கட்ட ஆய்வை நடத்தி உள்ளனர். அடுத்தடுத்த ஆய்வுகள் மேற்கொண்டு, அந்த இடம் சரியானது என முடிவுகள் வந்தால், அடுத்தக் கட்ட பணிகள் விரைவில் தொடங்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.