Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் உயரும் எரிவாயு கட்டணம் – செப்டெம்பர் முதல் 5.6% அதிகரிப்பு!!

மீண்டும் உயரும் எரிவாயு கட்டணம்  – செப்டெம்பர் முதல் 5.6% அதிகரிப்பு!!

11 ஆவணி 2026 செவ்வாய் 07:15 | பார்வைகள் : 528


பெரும்பாலான குடும்பங்கள் செலுத்தும் எரிவாயுவுக்கான குறிப்பு விலை, செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் 5.6% அதிகரிக்கவுள்ளதாக எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையம் (Commission de régulation de l'énergie) அறிவித்துள்ளது. மொத்த சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதே இந்த உயர்வுக்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, மாதந்தோறும் மாற்றமடையும் சராசரி விலையுடன் இணைக்கப்பட்ட ஒப்பந்தங்களை கொண்டுள்ள சுமார் 6 மில்லியன் குடும்பங்களை, அதாவது குடியிருப்பு எரிவாயு வாடிக்கையாளர்களில் சுமார் 60% பேரை பாதிக்கும். நிலையான விலை ஒப்பந்தம் கொண்டவர்களுக்கு இந்த உயர்வு பொருந்தாது.

கட்டுப்படுத்தப்பட்ட எரிவாயு விலைகள் நீக்கப்பட்ட பின்னர், PRVG எனப்படும் எரிவாயு விற்பனை குறிப்பு விலை சந்தைக்கான வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறது. செப்டெம்பர் 1 முதல் இந்த விலை வரி உட்பட சராசரியாக ஒரு மெகாவாட் மணிநேரத்துக்கு 172.05 யூரோக்களாக அதிகரிக்கிறது. இந்த உயர்வு முழுமையாக சர்வதேச சந்தைகளில் எரிவாயு விலை அதிகரித்ததன் விளைவாக ஏற்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஜூலை மாதத்தில் எரிவாயு கட்டணம் 7.4% அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர் காரணமாக, உலக எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி எரிவாயு விலையையும் கடுமையாக பாதித்துள்ளது. உலகின் சுமார் 20% எண்ணெயும், 20% திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதியும் வழக்கமாகச் செல்லும் முக்கிய கடல்வழியான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியதால், எரிசக்தி விநியோகம் பெருமளவில் பாதிக்கப்பட்டு விலைகள் உயர்ந்துள்ளன.