Paristamil Navigation Paristamil advert login

வெளியே வந்தால் உடல் எரியும் - மீன்களை போல் குளத்தில் வாழும் சிறுவன்

வெளியே வந்தால் உடல் எரியும் - மீன்களை போல் குளத்தில் வாழும் சிறுவன்

11 ஆவணி 2026 செவ்வாய் 15:13 | பார்வைகள் : 133


இளைஞர் ஒருவர் வெளியே வந்தால் உடல் எரியும் என்பதால் ஆண்டு கணக்கில் குளத்தின் உள்ளே வசித்து வருகிறார்.

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பெல்டங்கா என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த 16 வயது இளைஞர் இக்பால் ஷேக்.

இந்த இளைஞர் கிட்டதட்ட சில ஆண்டுகளாக தனது பெரும்பாலான நேரங்களில் அங்குள்ள குளத்திலே வசித்து வருகிறார்.

குளத்திலிருந்து வெளியே வந்தால் அவரது உடலில் கடும் எரிச்சல் ஏற்படுவதாகவும், குளத்தின் உள்ளே சென்றால் எரிச்சல் தணிவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு காரணம் தனது உடலின் உள்ளே ஜின் என்னும் அமானுஷ்ய சக்தி இருப்பதாக நம்புகிறார்.

நீண்ட நாட்களாக அவர் தண்ணீரில் மூழ்கி இருப்பதால், அவரது கைகள், கால்கள் மற்றும் பிற உடல் பாகங்களில் உள்ள தோல் வெளிறியுள்ளது. மேலும், சளி மற்றும் இருமலாலும் அவதிப்பட்டு வருகிறார்.

குடும்பத்தினர் அவரை அருகிலுள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அவருக்குத் தேவையான சிகிச்சை கிடைக்கவில்லை. நிதிப் பற்றாக்குறை காரணமாக அவரால் தனியார் சிகிச்சையை பெற முடியவில்லை.

அவரை குளத்தில் இருந்து வெளியே கொண்டு வர மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இது 'அக்வாஜெனிக் ப்ருரிடஸ்' எனப்படும் ஒரு அரிய மருத்துவ நிலையா என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.

இந்த நிலையால் பாதிக்கப்பட்ட ஒருவர் தண்ணீருடன் தொடர்பு கொள்ளும்போது கடுமையான அரிப்பு அல்லது எரிச்சல் உணர்வை அடைவார். ஆனால் இக்பாலின் விஷயத்தில், இதற்கே நேர்மாறாக உள்ளது.

அவரது அறிகுறிகளுக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிய கூடுதல் மருத்துவ மதிப்பீடு தேவைப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்த உள்ளூர் மக்கள் பலரும் அவரை பார்க்க குளத்திற்கு வருகை தருகின்றனர். அப்படி வருபவர்கள் அவல், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப்பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இன்னும் எவ்வளவு காலம் அவர் இப்படி குளத்தின் உள்ளே இருக்க முடியும் என கவலை தெரிவித்துள்ளனர்.