Paristamil Navigation Paristamil advert login

வடக்கு வங்க கடலின் மேல் அடர்த்தியான ஓசோன் படலம்!

வடக்கு வங்க கடலின் மேல் அடர்த்தியான ஓசோன் படலம்!

12 ஆவணி 2026 புதன் 09:22 | பார்வைகள் : 173


வடக்கு வங்கக் கடலின் மேல், 23 கி.மீ., உயரத்தில் வழக்கத்திற்கு மாறான அடர்த்தியுடன் ஓசோன் படலம் உள்ளதை, விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பூமிக்கு மேல் உள்ள வளி மண்டலத்தை, சர்வதேச அளவில் பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணிக்கின்றன. நம் நாட்டில் உள்ள பல்வேறு ஆய்வு நிறுவனங்கள், இந்தியாவின் மேல் உள்ள ஓசோன் படலத்தை ஆய்வு செய்தன.

அப்போது, வடக்கு வங்கக் கடலின் மேல், அதாவது, வடகிழக்கு மாநிலங்களுக்கு மேல், 21 முதல் 23 கி.மீ., உயரத்தில், வழக்கத்தை விட தடிமனான மற்றும் அதிக செறிவுள்ள ஓசோன் படலத்தை, விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இது, இந்திய வளிமண்டல ஆய்வு திட்டமான, 'நெட்ரேட்' ஏ.எஸ்.எம்.ஏ.,யின் வாயிலாக ஆவணப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தகவல், அமெரிக்காவின், 'எர்த் அண்டு ஸ்பேஸ் சயின்ஸ்' இதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

வளிமண்டலத்தின் மேல், 25 முதல் 30 கி.மீ., உயரத்தில் உள்ள, 'ஸ்ட்ராடோஸ்பியர்' எனும் அடுக்கில், ஆக்சிஜனின் மூன்று அணுச்சேர்க்கை வடிவமான, 'ஓ3' எனும், ஓசோன் படலம் உள்ளது. இது, சூரியனில் இருந்து பூமியை நோக்கி வரும் புற ஊதாக் கதிர்கள் உள்ளிட்ட தீங்கு செய்யும் கதிர்களை கட்டுப்படுத்துகிறது.

இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலம், நைனிடாலில் உள்ள ஏரீஸ் எனும், ஆரியபட்டா வானியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாக, ஹரிங்கட்டா, கடாங்கி மற்றும் கொச்சியில் உள்ள  206.5 மெகா ஹெர்ட்ஸ் ரேடார்கள் தொடர்ச்சியாக ஆய்வு செய்தன.

அதில், வடக்கு வங்கக் கடல் பகுதியில், ஒரு நாளுக்கும் மேல் நீடித்த, ஒரு அசாதாரண ஓசோன் படலம் கண்டறியப்பட்டது. இந்த படலம், ஓசோன் செறிந்த காற்று கீழ்நோக்கி சென்று, மீண்டும் மேலே சென்றதால் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த எதிர்பாராத கண்டு பிடிப்பு, காற்று நீரோட்டங்கள் எவ்வாறு ஓசோனை ஸ்ட்ராடோஸ்பியர் வழியாகக் கொண்டு செல்கின்றன என்பதை, ஆராய்ச்சியாளர்கள் நன்கு புரிந்துகொள்ள உதவுகிறது. இந்த மாற்றத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'இஸ்ரோ' தொடர்ந்து கண்காணித்து வருகிறது.