Paristamil Navigation Paristamil advert login

பயன்படுத்தப்பட்ட மின்சார வாகனங்களுக்கு புதிய உதவி!!

பயன்படுத்தப்பட்ட மின்சார வாகனங்களுக்கு புதிய உதவி!!

12 ஆவணி 2026 புதன் 21:24 | பார்வைகள் : 302


2026 செப்டம்பர் 1 முதல், பயன்படுத்தப்பட்ட மின்சார வாகனங்களை வாங்குவதற்கும் வாடகைக்கு எடுப்பதற்கும் புதிய நிதியுதவி கிடைக்க உள்ளது. இந்த உதவி எரிசக்தி சேமிப்பு சான்றிதழ்கள் (CEE) திட்டத்தின் மூலம் வழங்கப்படும். தகுதி பெறும் வாகனம் 100% மின்சாரமாகவும், 2017 முதல் 2023 வரை பிரான்சில் முதன்முறையாக பதிவு செய்யப்பட்டதாகவும் இருக்க வேண்டும்.

மேலும், வாகனம் ஒரு தொழில்முறை விற்பனையாளரிடமிருந்து வாங்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது வாடகைக்கு எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதன் பேட்டரி குறைந்தது 80% திறன் கொண்ட நல்ல நிலையில் இருக்க வேண்டும். வாங்கப்பட்ட அல்லது வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனம் குறைந்தது மூன்று ஆண்டுகள் வைத்திருக்க வேண்டும். சாதாரணமாக ஒரு வாகனத்திற்கு சுமார் 337 யூரோக்கள் உதவி கிடைக்கலாம்.

வீட்டு உதவி மற்றும் தனிநபர் சேவைத் துறையில் பணிபுரிபவர்களுக்கு இந்த உதவி அதிகமாக இருக்கலாம். 25,000 யூரோக்களுக்கும் குறைவான வாகனத்தை வாங்கினால், CEE உதவி 2,000 முதல் 2,360 யூரோக்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த திட்டம் செப்டம்பர் 2026 முதல் நான்கு ஆண்டுகளுக்கு அமுலில் இருக்கும்.

டக்ஸி ஓட்டுநர்களுக்கும் புதிய மின்சார வாகனங்களை வாங்க அல்லது வாடகைக்கு எடுக்க தனி உதவி வழங்கப்படுகிறது. இந்த உதவி சுமார் 3,500 யூரோக்கள், மேலும் வாகனமும் பேட்டரியும் ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்டிருந்தால் 5,500 யூரோக்கள் வரை கிடைக்கலாம். இதற்கிடையில், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு புதிய மின்சார கார்களைப் பெற உதவும் “சமூக லீசிங்” திட்டத்திற்கும் CEE மூலம் 401 மில்லியன் யூரோக்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.