Paristamil Navigation Paristamil advert login

தீயணைப்புப் படையினர் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு!!

தீயணைப்புப் படையினர்  வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு!!

13 ஆவணி 2026 வியாழன் 07:13 | பார்வைகள் : 280


தீயணைப்புப் படையினர் மற்றும் தீயணைப்பு சேவைகளில் பணியாற்றும் நிர்வாக, தொழில்நுட்ப ஊழியர்கள் இன்று ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒன்பது தொழிற்சங்கங்கள் இணைந்து இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன், பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் போதிய உபகரணங்கள் இல்லாமை காரணமாக தங்களிடம் “நியாயமான கோபமும், பொதுவான சோர்வும்” ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.

தீயணைப்புப் பணியாளர்களின் நிலைமையை மேம்படுத்த மூன்று முக்கிய கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ளன. தீயணைப்பு சேவைகளுக்கு நிலையானதும் போதுமானதுமான நிதி, தொழில்முறை தீயணைப்புப் படையினர் மற்றும் நிர்வாக, தொழில்நுட்ப ஊழியர்களை பெருமளவில் புதிதாக நியமித்தல், அத்துடன் பணியாளர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு தேசிய முன்னுரிமை வழங்குதல் ஆகியவையே அவற்றின் முக்கிய கோரிக்கைகளாகும். இன்று நண்பகல் Place Beauvau-வில் உள்துறை அமைச்சர் Laurent Nuñez-ஐ ஒன்பது தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் சந்திக்கவுள்ளனர். பிற்பகல் 2 மணிக்கு அதே இடத்தில் செய்தியாளர் சந்திப்பும் நடைபெறவுள்ளது.

இதற்கிடையில், 2026ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து பிரான்ஸில் ஏற்கனவே 115,000 ஹெக்டேர் நிலப்பரப்பு தீயில் கருகியுள்ளதாக Laurent Nuñez கடந்த ஜூலை மாதம் 26ஆம் திகதி தெரிவித்திருந்தார். இதில் Gironde பகுதியில் மட்டும் 42,000 ஹெக்டேர் அழிந்துள்ளது. மேலும், கடும் வெப்பம் மற்றும் வரலாறு காணாத வறட்சி காரணமாக காட்டுத்தீ ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது.