Paristamil Navigation Paristamil advert login

Drancy நகராட்சி மீது இணையத் தாக்குதல்: மக்களுக்கு அவசர பாதுகாப்பு எச்சரிக்கை!!

Drancy நகராட்சி மீது இணையத் தாக்குதல்: மக்களுக்கு அவசர பாதுகாப்பு எச்சரிக்கை!!

25 ஆடி 2026 சனி 07:30 | பார்வைகள் : 872


Drancy நகராட்சி மீது ரான்சம்வேர் (Ransomware) வகை இணையத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, நகராட்சியின் கணினி அமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வைரஸ் மேலும் பரவுவதைத் தடுக்க அனைத்து தகவல் தொடர்பு அமைப்புகளும் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் பல நகராட்சி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Drancy நகரத்தின் மேயர் Jean-Christophe Lagarde, ஜூலை மாதம் 3ஆம் திகதி முதல் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும், தாக்குதலாளர்கள் மீட்புத் தொகை (Ransom) கோரியிருந்தாலும் அதனை நகராட்சி செலுத்த மறுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வெளிப்புற பாதுகாப்பான சேவையகங்களில் சேமிக்கப்பட்டிருந்த தரவுகளைப் பயன்படுத்தி முழு தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பையும் மீண்டும் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு பல வாரங்கள் ஆகக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதற்கிடையில், குடியிருப்பாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்திருக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே நகராட்சி சேவைகளுடன் தொடர்புடைய அனைத்து இணையக் கணக்குகளின் கடவுச்சொற்களையும் அடிக்கடி மாற்றுமாறும், சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல், குறுஞ்செய்தி மற்றும் தொலைபேசி அழைப்புகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதுடன், தேசிய இணையப் பாதுகாப்பு அமைப்பின் உதவியுடன் மீட்புப் பணிகள் தொடர்கின்றன.