Paristamil Navigation Paristamil advert login

கஸ்பியன் கடலில் ஈரானிய கப்பல் மீது உக்ரேன் தாக்குதல் ஈரான் கடும் கண்டனம்

கஸ்பியன் கடலில் ஈரானிய கப்பல் மீது உக்ரேன் தாக்குதல்  ஈரான் கடும் கண்டனம்

26 ஆடி 2026 ஞாயிறு 10:23 | பார்வைகள் : 227


கஸ்பியன் கடலில் பயணித்த ஈரானிய வணிகக் கப்பல் ஒன்றின் மீது உக்ரேனியப் படைகள் நடத்திய தாக்குதலில் வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டு, மாலுமி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக ஈரானிய வெளிவிவகார அமைச்சு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இத்தாக்குதலை ஒரு "பகைமை மற்றும் குற்றச் செயல்" எனக் குறிப்பிட்டுள்ள ஈரான், இதற்காகத் தெஹ்ரானில் உள்ள உக்ரேனின் தற்காலிக இராஜதந்திரப் பிரதிநிதியை நேரில் வரவழைத்துத் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

உக்ரேன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கி தனது எக்ஸ்பக்கத்தில், ரஷ்யப் போர்க்கப்பல் மற்றும் ஈரானுடன் தொடர்புடைய இராணுவப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல்கள் மீது உக்ரைனியப் படைகள் வெற்றிகரமாக நீண்டதூரத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்

ஜூலை தொடக்கம் முதல் மத்திய கிழக்கில் உள்ள வளைகுடா நாடுகள் மற்றும் அமெரிக்க இராணுவத் தளங்களை ரஷ்யா தனது செயற்கைக்கோள்கள் மூலம் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

ஜூலை 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் மட்டும் பஹ்ரைனில் உள்ள இரு விமானத் தளங்கள், ஜோர்தான் மற்றும் குவைத்தில் உள்ள தலா ஒரு விமானத் தளம் ஆகியவற்றை ரஷ்யா கண்காணித்துள்ளதாகவும், இந்தச் செயற்கைக்கோள் புகைப்படங்கள் ஈரானுக்கு வழங்கப்பட்டு, அங்குத் தாக்குதல்களை நடத்துவதற்கும் சேதங்களை மதிப்பீடு செய்வதற்கும் பயன்படுத்தப்படுவதாகவும் உக்ரேன் தெரிவித்துள்ளது.

இத்தாக்குதல் மூலம் போரை மேலும் விரிவுபடுத்த உக்ரைன் முயல்வதாகக் குற்றம் சாட்டியுள்ள ஈரான், தனது தேசிய நலன்களையும் பாதுகாப்பையும் உறுதி செய்யத் தற்காப்பு உரிமையைப் பயன்படுத்திப் தகுந்த பதிலடி கொடுக்கத் தயங்காது என எச்சரித்துள்ளது.  

உக்ரேனின் இச்சட்டவிரோத நடவடிக்கை குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கண்டிப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி வலியுறுத்தியுள்ளார்.

உக்ரேன் போரின் போது ரஷ்யாவால் பயன்படுத்தப்படும் ஈரானிய வடிவமைப்பு கொண்ட ட்ரோன்களை உக்ரேன் தொடர்ந்து எதிர்கொண்டு வரும் நிலையில், கஸ்பியன் கடலில் ஏற்பட்டுள்ள இத்தாக்குதல் சர்வதேச அரங்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.