Paristamil Navigation Paristamil advert login

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய சக்திவாய்ந்த ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய சக்திவாய்ந்த ஏவுகணை மற்றும் ட்ரோன்  தாக்குதல்

31 ஆடி 2026 வெள்ளி 06:23 | பார்வைகள் : 530


ரஷ்யா ஒரு "பெரும் தாக்குதலுக்கு" தயாராகி வருவதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி  29.07.2026 எச்சரித்திருந்த நிலையில் 30.07.2026 அதிகாலை இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.

பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனிலேயே தயாரிக்க அனுமதி பெறுவதற்காக, இந்த வாரம் வொஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை ஜெலென்ஸ்கி நேரில் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து இத்தாக்குதல் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய சக்திவாய்ந்த ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு குழந்தைகள் உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய உக்ரைனின் கிரிவி ரிஹ் நகருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள வீட்டின் மீது வீசப்பட்ட பொலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலில் 5 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர்.

தலைநகர் கீவ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் மூன்று குடியிருப்பு அல்லாத கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டது என மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.

போல்டாவா நகரில் நோவா போஷ்டா தபால் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.