Paristamil Navigation Paristamil advert login

இணையவழியில் மட்டுமே பிரேத பரிசோதனை அறிக்கை; போலீசாருக்கு டி.ஜி.பி., உத்தரவு

இணையவழியில் மட்டுமே பிரேத பரிசோதனை அறிக்கை; போலீசாருக்கு டி.ஜி.பி., உத்தரவு

1 ஆவணி 2026 சனி 07:50 | பார்வைகள் : 579


இன்று முதல், மருத்துவ சிகிச்சை ஆவணங்கள் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகளை, இணையதளம் வாயிலாக மட்டுமே கேட்டுப் பெற வேண்டும்' என, போலீஸ் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள குற்றவாளிகளை கண்காணிக்க, சி.சி.டி.என்.எஸ்., எனும் குற்றம் மற்றும் குற்றவாளிகள் வலைப்பின்னல் எனும் இணையதளம் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் இதன் மென்பொருள் நவீனமயமாக்கப்பட்டு, சி.சி.டி.என்.எஸ்., 2.0 என, செயல்படுகிறது. அதேபோல, நாடு முழுதும் மருத்துவம் தொடர்பான சட்ட ரீதியான ஆவணங்கள் உள்ளிட்ட விபரங்களை பதிவேற்றம் செய்ய, 'மெட்லீபர்' என்ற இணையதளம் பயன்படுத்தப்படுகிறது.

தற்போது, இந்த மெட்லீபருடன், சி.சி.டி.என்.எஸ்., 2.0 இணையதளம் இணைக்கப்பட்டு உள்ளது. போலீசார், இனி மருத்துவ சிசிச்சை ஆவணங்கள், விபத்து காயங்கள் குறித்த விபரங்கள், பிரேத பரிசோதனை அறிக்கைகள், பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டோரின் மருத்துவ அறிக்கைகள், கைதிகள் தொடர்பான மருத்துவ சிகிச்சை விபரங்கள் அனைத்தும், சி.சி.டி.என்.எஸ்., 2.0 இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பித்து பெற வேண்டும் என, டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பி.,களுக்கு, அவர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 'இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. விதிவிலக்கான சூழ்நிலைகளை தவிர, கையால் எழுதப்பட்ட அல்லது காகித வடிவிலான கோரிக்கைகளை அனுப்புவது தவிர்க்கப்பட வேண்டும்' என, அதில் கூறப்பட்டுள்ளது.