Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரோவை மறுசீரமைக்கிறது மத்திய அரசு; புதிய விஞ்ஞானிகள் தேர்வு பணி மும்முரம்

இஸ்ரோவை மறுசீரமைக்கிறது மத்திய அரசு; புதிய விஞ்ஞானிகள் தேர்வு பணி மும்முரம்

1 ஆவணி 2026 சனி 08:58 | பார்வைகள் : 468


இந்திய விண்வெளி ஆய்வு மையமான, 'இஸ்ரோ'வில், 100க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் திடீரென விலகிய நிலையில், புதிதாக விஞ்ஞானிகளை சேர்த்து மறுசீரமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிறுவனமான இஸ்ரோவில் இருந்து, 100க்கும் மேற்பட்ட முதல்நிலை விஞ்ஞானிகள், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்டோர், கடந்த சில மாதங்களாக பதவி விலகினர். அவர்களுக்கு, தனியார் நிறுவனங்களில் கூடுதல் சம்பளமும், உயர்ந்த பதவிகளும் வழங்கப்பட்டதாக தெரிகிறது.அவ்வாறு வெளியேறிய விஞ்ஞானிகளின் எண்ணிக்கை, 25 சதவீதத்துக்கும் அதிகம் என்பதால், இஸ்ரோவின் முக்கிய ஆய்வு பணிகள் முடங்கின.

இதையடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் வெளியேற, மத்திய விண்வெளி துறை தடை விதித்தது. இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், புதிய விஞ்ஞானிகளை சேர்த்து, தொடர்ச்சியான பணிகளை மேம்படுத்தும் முயற்சியில், இஸ்ரோ மத்திய ஆட்சேர்ப்பு வாரியமான ஐ.சி.ஆர்.பி., மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் எதிரொலியாக, சில தினங்களில், அதிகளவிலான ஆள்சேர்ப்பு விளம்பரங்களையும், தொழில் பழகுனர் விளம்பரங்களையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, 'கேட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற இன்ஜினியர்கள், மதிப்பெண் மற்றும் நேர்முக தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மின்னணுவியல் - 34, இயந்திரவியல் - 26, கணினி அறிவியல் - 13, சிவில் - 10, மின்சாரம் - 4, குளிர்பதனம் - 2, கட்டடக்கலை - 2, கட்டுமானம் - 1 என, மொத்தம் 92 பணியிடங்களுக்கு விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அவர்கள், பெங்களூரு, திருவனந்தபுரம், ஸ்ரீஹரிகோட்டா, ஆமதாபாத், ஹைதராபாத், மகேந்திரகிரி ஆகிய இடங்களில் பணியமர்த்தப்படுவர்.அதேபோல், 113 உதவியாளர், 81 இளநிலை தனி உதவியாளர், 22 மேல்நிலை எழுத்தர், 10 சுருக்கெழுத்தர் என, மொத்தம் 244 துணை நிர்வாகப் பணியிடங்களுக்கும் ஆள் சேர்ப்பு நடத்தப்பட உள்ளது.

மேலும், இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கான தொழில் பயிற்சிக்கும், 220 பட்டதாரிகள், 120 தொழில்நுட்ப பயிற்சியாளர்கள், 70 வர்த்தக நடைமுறை பட்டய பயிற்சியாளர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இஸ்ரோவில், ஒரே சமயத்தில் இவ்வளவு பேர் சேர்ப்பதற்கான அறிவிப்பு தற்போது தான் வெளியாகி உள்ளது.

இதனால், இஸ்ரோவை மறுகட்டமைக்கும் முயற்சியில், மத்திய அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளதையும், அடுத்த பாய்ச்சலுக்கு தயாராவதையும் அறிய முடிகிறது.