Paristamil Navigation Paristamil advert login

காவிரி நீர் திறப்பு விவகாரம்; உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு

காவிரி நீர் திறப்பு விவகாரம்; உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு

2 ஆவணி 2026 ஞாயிறு 12:11 | பார்வைகள் : 478


காவிரி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட உத்தரவிடக்கோரி, ஆக.,3ம் தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரை இருப்பதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாள்களிடம் அவர் பேசியதாவது; காவிரி விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை   கர்நாடகா  மதிக்காமல் இருந்து வருகிறது. கடந்த 29ம் தேதி முதல் 3,500 கனஅடியை திறந்திருக்க வேண்டும். அதை ஏதுமே செய்யவில்லை. கர்நாடகா முதல்வரும் தமிழகத்திற்கு எதிராக பேசி வருகிறார். வரும் ஆக.,3ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர இருக்கிறது. அதற்கான ஆலோசனைகள் முடிவடைந்து விட்டன.

eகர்நாடாகவில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்ற ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். ஆனால், இங்குள்ள அரசியல் கட்சிகள், தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வரக்கூடாது என்று வேலை செய்கின்றனர்.  சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றும் போது இருந்த அதிமுக, 2 தினங்களுக்குப் பிறகு அதனை எதிர்க்கின்றனர்.  உச்சநீதிமன்றத்திலும் வழக்கு போடுகிறார்கள்.

அந்தத் தீர்மானத்தை கொண்டு வந்ததே எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தான். அவருக்கு எதுவுமே தெரியவில்லை. யாரோ கொடுத்ததை படித்துள்ளார். தீர்மானம் நிறைவேற்றப்படும் கடைசி நாளில், 'நாங்கள் கொடுத்தோம். வேண்டுமென்றால் எடுத்துக்கோங்க, இல்லையென்றால் வைத்துக் கொள்ளலாம்,' என்று கூறுகிறார். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நிலைப்பாடு. அவங்களின் குறிக்கோளே, முதல்வர் எந்தவகையிலாவது சுமூகமான தீர்வை கண்டு விடுவாரோ என்ற பயத்தில் தான், தமிழக அரசியல் கட்சிகள் பாஜவோடு சேர்ந்து, தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். இப்படி இருக்கும் போது, எப்படி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட முடியும்.

நமக்கான தேவை நம்முடைய நீரை பெற வேண்டும். அதற்கான அனைத்து வழிவகைகளையும் முதல்வர் செய்து வருகிறார்.  சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றும் போது, இபிஎஸ் உள்பட அனைவரும் இருந்தார்கள். அப்புறம் ஏன் வழக்கு போட வேண்டும்.  முதல்வர் இப்போதைக்கு கர்நாடகா செல்லும் சாத்தியக்கூறுகள் தற்போது ஏதுமில்லை. கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கபினி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டாலும்,  3500 கனஅடி என்பது 4.5 டிஎம்சி தான். அதுமட்டுமில்லாமல், கடந்த 3 மாதங்களில் 17 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும். ஒவ்வொரு முறையும் நாம் உச்சநீதிமன்றம் செல்லும் போது அவர்கள் தண்ணீர் திறந்து விடுகிறார்கள். இதற்காக, நாம் உச்சநீதிமன்றம் செல்லாமல் இருக்க முடியாது. நிரந்தர தீர்வு தேவை. மேகதாது அணைக்கு எதிராக தனி வழக்காக போட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, காவிரி நீரை திறந்து விடக்கோரி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.