Paristamil Navigation Paristamil advert login

தொகுதி மறுவரையறையை ஆதரிப்போர் எட்டப்பர்கள்; ராகுல்

தொகுதி மறுவரையறையை ஆதரிப்போர் எட்டப்பர்கள்; ராகுல்

2 ஆவணி 2026 ஞாயிறு 13:14 | பார்வைகள் : 432


தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள் என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், எம்பியுமான ராகுல் விமர்சித்து உள்ளார்.

சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கான பயிற்சி முகாம் இன்று நிறைவு பெறுகிறது. இதில் ராகுல் பங்கேற்று பேசினார். பின்னர், காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ராகுல் கூறியதாவது;

தொகுதி மறுவரையறை என்பது தமிழக மக்களின் அதிகாரத்தை பறிக்க பாஜ செய்யும் சதி. தமிழகத்தில் பழங்கால வரலாற்றில் எட்டப்பன் என்ற சரித்திர புகழ்பெற்ற கதாபாத்திரம்  உண்டு.

துரோகம் என்ற அடையாளத்திற்காக தமிழக மக்கள் பயன்படுத்தும் வார்த்தை தான் எட்டப்பன். தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள். இவர்கள் 21ம் நூற்றாண்டின் எட்டப்பர்கள்.

தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும். தமிழகம் மற்றும் தமிழர்களின் எதிர்கால பிரச்னை. தமிழர்கள் யாரும் தொகுதி மறுவரையறையை ஆதரிக்கக்கூடாது. ஒவ்வொரு மாநில கட்சியும், தேசிய கட்சியும் தொகுதி மறுவரையறையை தோற்கடிக்க வேண்டும்.

இவ்வாறு ராகுல் கூறினார்.

தேர்தல் முடிவு வந்த அன்றே, கூட்டணி கட்சியான திமுகவை கழுத்தறுத்து விட்டு, தவெகவை ஆதரிக்க ஓடிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல், 'எட்டப்பர்கள்' என்று பிறரை விமர்சனம் செய்வது வேடிக்கையிலும் வேடிக்கை என்கின்றனர், அரசியல் கட்சியினர்.