Paristamil Navigation Paristamil advert login

பெருவில் சுற்றுலாப் பயணிகள் சென்ற விமானம் விபத்து - 13 பேர் பலி!

பெருவில் சுற்றுலாப் பயணிகள் சென்ற விமானம் விபத்து - 13 பேர் பலி!

2 ஆவணி 2026 ஞாயிறு 12:01 | பார்வைகள் : 521


பெரு நாட்டில் புகழ்பெற்ற நாஸ்கா கோடுகள் தொல்பொருள் தளத்தின் மேல் பறந்து கொண்டிருந்த சிறிய ரக சுற்றுலா விமானம் ஒன்று சனிக்கிழமை (01) விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த அனைத்து 13 பேரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்துக்குள்ளான விமானத்தில் 11 சுற்றுலாப் பயணிகளும் 2 விமானிகளும் இருந்துள்ளனர்.

உயிரிழந்த பயணிகளில் 2 ஜேர்மனியர்கள், 2 ஸ்பெயின் நாட்டவர்கள் மற்றும் 7 இத்தாலியர்கள் அடங்குவர் எனப் பெருவின் அரசாங்கச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் 'ஏரோடியானா' என்ற உள்ளூர் நிறுவனத்திற்குச் சொந்தமான  சிறிய விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது.

பிஸ்கோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இவ்விமானம், அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 1:00 மணியளவில் 'புவேப்லோ வீஜோ' பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

"விபத்தின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு பார்க்கையில், எவரும் உயிர்தப்பவில்லை. இதுவரை 4 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன" எனப் பொலிஸ் அதிகாரி ஜார்ஜ் ஆண்ட்ரேட் தெரிவித்துள்ளார்.

தெற்கு பெருவில் உள்ள பாலைவனப் பகுதியில் பண்டைய காலத்தில் வரையப்பட்ட விலங்குகள் மற்றும் உருவங்களின் கோடுகளே 'நாஸ்கா கோடுகள்' ஆகும். இது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாகவும், பிரபலமான சுற்றுலா மையமாகவும் விளங்குகிறது.

இந்த நாஸ்கா கோடுகள் பகுதியைச் சுற்றிப் பார்ப்பதற்காகச் சிறிய விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் விமான விபத்துகள் நடப்பது இது முதன்முறையல்ல:

2022 இல் சுற்றுலா விமானம் நொறுங்கி 7 பேர் உயிரிழந்தனர், 2010-இல் மற்றுமொரு  சுற்றுலா விமான விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

தற்போது விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.