Paristamil Navigation Paristamil advert login

பத்திரப்பதிவு முடிந்த ஒரு வாரத்தில் பட்டா மாறுதல்

பத்திரப்பதிவு முடிந்த ஒரு வாரத்தில் பட்டா மாறுதல்

3 ஆவணி 2026 திங்கள் 07:50 | பார்வைகள் : 478


வருவாய் ஆய்வாளர் தலை யீடு குறைக்கப்பட்டதால், 'ஆன்லைன்' முறையில் பட்டா மாறுதல் பணிகளை, ஒரு வாரத்தில் முடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது' என, வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில், வீடு, மனை வாங்குவோர், அதற்கா ன பத்திரப்பதிவின் போது, பட்டா பெயர் மாற்றத்துக்கும் விண்ணப்பிக்கலாம். இதில், சர்வே எண்ணில், உட்பிரிவு உருவாக்க வேண்டிய தேவை இல்லாத நிலையில், தானியங்கி முறையில் பட்டா மாறுதல் வழங்கும் திட்டம், 2020ல் தொடங்கப்பட்டது.

இதன்படி, சொத்து விற்பவர், வாங்குபவர் ஆகியோரின் ஆதார் விபரங்களை சரி பார்த்து, சார் - பதிவாளர் ஒப்புதல் அளித்தால் போதும். இதுதொடர்பான விபரங்கள், பதிவுத்துறை இணையதளத்தில் இருந்து, வருவாய் துறையின், தமிழ் நிலம் தளத்துக்கு அனுப்பப்படும்.

அங்கு, தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தார் ஒப்புதலுடன், பட்டாவில் பெயர் மாற்றம் நடக்க வேண்டும்.

ஆனால், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரின் தலையீடு காரணமாக, பட்டா மாறுதல் பணிகள் தாமதமாகின. இதுகுறித்த புகார்கள் எழுந்த நிலையில், வருவாய் துறை, பதிவுத்துறை, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர்கள் நிலையில் ஆலோசனை நடந்தது. அதன் அடிப்படையில், தானியங்கி பட்டா மாறுதலில் சரிபார்ப்பு பணிகள், நான்கில் இருந்து இரண்டு நிலைகளாக குறைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தானியங்கி முறை பட்டா மாறுதல் பணியில், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் தலையீடு தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால், சார் - பதிவாளர் ஒப்புதல் அளித்த கோப்புகள், தாலுகா அலுவலக துணை தாசில்தாருக்கு நேரடியாக செல்லும். அவர் ஒப்புதல் அளித்தவுடன், பட்டா பெயர் மாற்றம் நடந்து விடும். இதனால், பத்திரப்பதிவு முடிந்த ஒரு வாரத்தில் பட்டா மாறுதல் சாத்தியமாகி உள்ளது.

பெயர் மாற்றம் முடிந்ததும், சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களின் மொபைல் போனுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு அடுத்த கட்டமாக, மாறுதல் செய்யப்பட்ட பட்டா பிரதியை, அவர்களுக்கு அனுப்புவதற்கான வழிகளை ஆலோசித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.