Paristamil Navigation Paristamil advert login

காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடும் முடிவு; தள்ளி வைக்க தமிழக அரசு திட்டம்

காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடும் முடிவு; தள்ளி வைக்க தமிழக அரசு திட்டம்

3 ஆவணி 2026 திங்கள் 09:54 | பார்வைகள் : 449


காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடும் முடிவு; தள்ளி வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

காவிரி நதிநீர் பிரச்னை மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, கர்நாடகா முதல்வர் டி.கே. சிவக்குமாரை, ஆக.3ம் தேதி பெங்களூருவில் சந்தித்து பேச, தமிழக முதல்வர் விஜய் திட்டமிட்டு இருந்தார். இதற்காக, கர்நாடகா முதல்வருக்கு கடிதம் அனுப்பப்பட்டு, அவரது ஒப்புதலும் பெறப்பட்டு இருந்தது.

சூழ்நிலை சரியில்லாததால், முதல்வர் விஜய் பெங்களூரு வருவதை தவிர்க்க வேண்டும் என, கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறினார். இதையடுத்து, தமிழகத்திற்கு உரிய நீர் திறக்க, கர்நாடகாவிற்கு உத்தரவிட வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவெடுத்தது.

இது தொடர்பாக, ஆக.3ம் தேதி மேல் முறையீடு செய்வதற்கான பணிகளில், அரசு வழக்கறிஞர்கள் கவனம் செலுத்தி வந்தனர். இந்நிலையில், கர்நாடகாவில் கொட்டி தீர்க்கும் கனமழையால், அங்குள்ள கபினி அணை முழுமையாக நிரம்பியுள்ளது. அதிலிருந்து வினாடிக்கு 25,000 கன அடிக்கு மேல் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து கிடைப்பது உறுதியாகி உள்ளது.  எனவே, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்வதை தள்ளி வைக்க, தமிழக அரசு திட்டமிடப்பட்டு உள்ளது.

அதேநேரம், தமிழகத்திற்கு முறைப்படி தண்ணீர் வழங்காமல், 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீர் திறந்தால் போதும் என, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகம் 9.19 டிஎம்சி நீரை மட்டுமே கேட்டுள்ளதாக, அனைத்து கட்சி கூட்டத்திற்கு பின், கர்நாடகா முதல்வர் டி.கே. சிவக்குமார் தவறான தகவலை அளித்துள்ளார்.

எனவே, காவிரி மேலாண்மை ஆணையம் நடுநிலையாக செயல்பட வலியுறுத்தி, உச்ச நீதி மன்றத்தில் முறையீடு செய்வது குறித்தும், தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.