Paristamil Navigation Paristamil advert login

தமிழகம் வந்த ராகுலை விஜய் சந்திக்காதது ஏன்?

தமிழகம் வந்த ராகுலை விஜய் சந்திக்காதது ஏன்?

4 ஆவணி 2026 செவ்வாய் 08:30 | பார்வைகள் : 570


இண்டி' கூட்டணியில், தவெக இணைவது குறித்து முதல்வர் விஜய் முடிவெடுக்காமல் இருப்பதால், சென்னைக்கு வந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை, அவர் சந்திக்க திட்டமிடவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மாமல்லபுரத்தில் நடந்த காங்., மாவட்ட தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு விழாவில் பங்கேற்க, தமிழகத்துக்கு ராகுல் வந்தார். சென்னையில் தமிழக முதல்வர் விஜயை ராகுல் சந்திப்பார் எனவும் 'இண்டி' கூட்டணியில், தவெக இடம் பெறுவது குறித்து பேசுவார் என்றும் தகவல் பரவியது. ஆனால், சென்னைக்கு வந்த ராகுல், முதல்வர் விஜயை சந்திக்கவில்லை.

தமிழக காங்., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

ராகுலின் சென்னை நிகழ்ச்சி நிரலில், விஜயை சந்திக்கும் திட்டம் இல்லை என்பதை, தமிழக காங்., தலைவர் மாணிக்கம் தாகூர் ஏற்கனவே கூறி விட்டார். விஜய், ராகுல் இருவரும் சந்திக்காததற்கு, கருத்து வேறுபாடு காரணமல்ல.

'இண்டி' கூட்டணியில் இணைவது குறித்து, தவெக தலைமை மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறது. தமிழகத்தில், தவெக - காங்., கூட்டணி அமைந்தாலும், 'இண்டி' கூட்டணியில் இணைவதாக தவெக இதுவரை அறிவிக்கவில்லை. தமிழகத்தை மையப்படுத்தி, தனித்த அரசியல் அடையாளத்தை முன்னிலைப்படுத்த தவெக விரும்புகிறது.

மேலும், மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டாம் எனவும் தவெக கருதுவதால், 'இண்டி' கூட்டணியில் சேர அவசரம் காட்டவில்லை. 'இண்டி' கூட்டணியில், தவெக இணைவது குறித்து விஜய் முடிவெடுக்காமல் இருப்பதால், சென்னைக்கு வந்த ராகுலை, அவர் சந்திக்க திட்டமிடவில்லை.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.